நீலகிரி : பில்லிக்கம்பை கிராம பகுதியில் அமைந்துள்ள மதுபானக் கடையை அகற்றக்கோரி நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி : பில்லிக்கம்பை கிராம பகுதியில் அமைந்துள்ள மதுபானக் கடையை அகற்றக்கோரி நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உதகை அருகே உள்ள பில்லிக்கம்பை கிராமப்பகுதியில் அமைந்துள்ள மதுபானக் கடை அகற்றக்கோரி கடந்த மூன்று வாரமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் புகார் மனு அளித்தனர். பின்னர், ஒரு வாரத்திற்குள் மதுபானக் கடையை அகற்றுவதாக அதிகாரிகள் கூறிய நிலையிலும், மதுபானக் கடையை இன்னும் அகற்றாததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

மேலும், தங்கள் கிராமப் பகுதியில் 2,000-க்கும் மேற்பட்ட பலதரப்பட்ட குடும்பங்கள் வசிப்பதாகவும், தங்கள் கிராமப் பகுதியில் மதுபானம் அருந்திவிட்டு வரும் குடிமகன்கள் காலி பாட்டில்களை சாலைகளில் வீசுவதும், பள்ளிக்கு செல்லும் மாணவர்களை தகாத வார்த்தைகளால் திட்டி ரகளை செய்வதும், தேயிலைத் தோட்டத் தொழிலாளர் பெண்கள் மாலை நேரங்களில் வீடு திரும்பும் பொழுது கேலி செய்வது போன்ற அசம்பாவிதங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
இதனால், பாதிப்படைந்த பில்லிக்கம்பை கிராம மக்கள் அப்பகுதியில் அமைந்துள்ள மதுபானக் கடையை அகற்ற தொடர்ந்து மூன்று முறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும், எந்தவித நடவடிக்கை எடுக்காத காரணத்தினால், ஊர் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை கைவிடக் கோரி பொதுமக்களிடையே காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்திய பின், போராட்டத்தை கைவிட்ட கிராம மக்கள் மதுபான கடையை அகற்றாவிட்டால் மீண்டும் தங்கள் கிராம பகுதியில் சாலை மறியலில் ஈடுபடுவதாக கூறி கலைந்து சென்றனர்.