கோவை : மணல் கொள்ளை மற்றும் குப்பைகளினால் அழிவை நோக்கி இருக்கும் ஆனைகட்டி கொடுங்கரை பள்ளம் நீர்வழிப்பாதையை மீட்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை : மணல் கொள்ளை மற்றும் குப்பைகளினால் அழிவை நோக்கி இருக்கும் ஆனைகட்டி கொடுங்கரை பள்ளம் நீர்வழிப்பாதையை மீட்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் ஓடும் பெரும்பாலான ஓடைகள் மற்றும் ஆறுகள் நிரம்பி வழிந்து வருகின்றன. இந்த நிலையில், தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களை தழுவிச் செல்லும் மிகவும் பழமை வாய்ந்த நீர்நிலை மணல் கடத்தல் மற்றும் குப்பைகளினாலும் அழிந்து போகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மூலகங்கல் என்ற மலைப் பகுதியில் உருவாகி பல நீர் ஓடைகள் வழியாக கொடுங்கரை என்ற நீர் வழிப்பாதை ஆனைகட்டியை தழுவி தமிழக கேரள எல்லையை ஒட்டியே கூடப்பட்டியில் உள்ள கூடுதுரையில் சிறுவானி மற்றும் பவானியுடன் சங்கமித்து பரளிகாடு வழியாக பாவானியாக கரைபுரண்டு ஓடுகிறது.

கடந்த காலங்களில் கொடுங்கரை நீர் வழிப்பாதைகளில் மணல் திருட்டு அதிகமாக இருக்கும் காரணத்தால் தற்போது நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. கேரள அரசாங்கம் நீர் வழிப்பாதைகளில் மணல் எடுக்க தடை விதித்துள்ளதைப் போலவே, தமிழக அரசாங்கமும் மணல் எடுக்க தடை விதிக்க வேண்டும் என்பதே இப்பகுதிகளில் உள்ள மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

அதேவேளையில், இந்த நீர் வழிப்பாதைகள் குப்பைகளினாலும், வேண்டாத தாவரங்களினாலும் ஆக்கிரமித்துள்ளதால் ஓடைகளில் வரும் நீர் பாய்ந்து செல்ல வழி இல்லா நிலை உள்ளது. எனவே, உரிய நடவடிக்கை எடுத்து நீர்நிலைகளைக் காப்பாற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.