கோவை : திருமணமான தொழிலதிபர்களை குறிவைத்து பணம் பறிக்கும் மைதிலி மற்றும் காவலர் கவிதா மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட சதீஷ் குமார் என்பவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
கோவை : திருமணமான தொழிலதிபர்களை குறிவைத்து பணம் பறிக்கும் மைதிலி மற்றும் காவலர் கவிதா மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட சதீஷ் குமார் என்பவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
கோவை ஒண்டிபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் இவரது மனைவியுடனான கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில், சதீஷ் குமார் கருமத்தம்பட்டி காவல்நிலையத்தில் பணிபுரிந்த பெண் காவலர் கவிதா என்பவருடன் பழகி வந்தார். சதீஷ்குமார் அவரது டிராவல்ஸ் நிறுவனத்தில் அந்தப் பெண் போலீசாருடன் தனிமையில் உல்லாசமாக இருப்பது போன்ற காட்சிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் பரவியது.
இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு கருமத்தம்பட்டி காவல்நிலையத்தில் பணிபுரிந்த காவலர் கவிதாவை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, இந்த விவகாரம் முடிவுக்கு வந்தது.

இந்த நிலையில், டிராவல்ஸ் அதிபர் சதீஷ்குமார் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கண்காணிப்பாளரை இன்று நேரில் சந்தித்து புகார் அளித்தார்.
முன்னதாக, அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது :- எனது டிராவல்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த மைதிலி என்பவர் மூலம் கவிதா என்ற பெண் காவலர் அறிமுகம் கிடைத்தது. அதன்பின் அந்த பெண் காவலருடன் பல இடங்களில் தனிமையில் இருந்து வந்துள்ளேன். இப்படியிருக்க எனது அலுவலகத்தில் இருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவுகள் திட்டமிடப்பட்டு வெளியானது. இந்த வீடியோக்கள் வெளிவர காரணமாக இருந்த மைதிலி திட்டமிட்டு என்னிடம் பணம் பறித்துள்ளார். இதைத் தொடர்ந்து, நான் விசாரித்த போது, இந்தப் பணத்தில் கவிதாவிற்கும் பங்கு போகிறது என்பதை அறிந்துள்ளேன்.

மேலும், மைதிலியும், காவலர் கவிதாவும் சேர்ந்து திருமணமான வசதி படைத்தவர்களை திட்டமிட்டு பழகி வீடியோக்கள் எடுத்து மிரட்டி வருகிறார்கள். ஆகவே, இருவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என வலியுறுத்தியுள்ளார்.