கோவை : கோவை மாநகராட்சிக்குட்பட்ட சிங்காநல்லூர் குளக்கரையில் வானிலை ஆய்வு மையத்தினை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி, மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத் ஆகியோர் திறந்து வைத்தனர்.
கோவை : கோவை மாநகராட்சிக்குட்பட்ட சிங்காநல்லூர் குளக்கரையில் வானிலை ஆய்வு மையத்தினை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி, மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத் ஆகியோர் திறந்து வைத்தனர்.

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 63-ல் உள்ள சிங்காநல்லூர் குளக்கரையில் நகர்ப்புற பல்லுயிர்கள் பாதுகாப்பு மண்டலம், வானிலை நிலையம் திறப்புவிழா மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி தலைமையில் நடைபெற்றது. அப்போது, மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் மின் இயக்கி துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு மாநகராட்சி துணை ஆணையாளர் ச. பிரசன்னா ராமசாமி முன்னிலை வகித்தார்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி பேசியதாவது :- தமிழக அரசு நிலத்தடிநீர் பெறுவதற்கான பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. நீராதாரங்களை பெருக்குவதற்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குடிமராமத்து திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு ரூ. 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. கோவை மாவட்டத்திற்கு ரூ. 7 கோடியே 45 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து, இன்றைக்கு 45 பணிகள் எடுக்கப்பட்டிருக்கிறது. ஏரிகள், வரத்துக்கால்வாய்கள், குளங்கள், கால்வாய்கள் இவற்றையெல்லாம் சீரமைப்பதின் மூலமாக மழைநீரை வீணாக்காமல் சேமித்திடவும், நிலத்தடி நீர் பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
விவசாயிகளோடு இணைந்து கிராமப்பகுதிகளில் உள்ள ஊரணிகள், கன்மாய்கள், பொதுப்பணித்துறையினுடைய கன்மாய்களை சீரமைப்பதற்கும் ரூ. 1,250 கோடி ரூபாய் அறிவிப்பு செய்து முதலமைச்சர் ஒரு வார காலத்திற்கு முன்பான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். கோவை மாநகராட்சியை ஒட்டியுள்ள பல்வேறு ஏரிகள், குளங்களை அரசு மற்றும் மாநகராட்சி, தன்னார்வ அமைப்புகளோடு இணைந்து முழுஅளவில் நீர் தேக்கி வைக்கக்கூடிய சூழ்நிலையில் சிங்காநல்லூர் குளம், கிருஷ்ணம்பதி, செல்வம்பதி, வாலாங்குளம், பெரியகுளம் போன்ற குளங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் நீரை சேமித்து வைக்கக்கூடிய ஒரு சூழ்நிலை இருக்கிறது.

சிங்காநல்லூர் குளம் சுற்றுச்சூழலுடன் கூடிய குளமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகம் மாநகராட்சியோடு இணைந்து கியூப் என்ற நிறுவனம் இந்த பணியை செய்து வருகிறார்கள். சிங்காநல்லூர் குளம் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் முழு அளவிலே நீரை கொள்ளளவு கொண்டு வருவதற்கும், அதேபோல இங்கு பல்வேறு உயிரினங்களைப் பராமரிக்கவும், வரும் காலத்தில் ஒரு சரணாலயம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு இந்த சிங்காநல்லூர் குளத்தினை மேம்படுத்திட மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி மற்றும் பல்வேறு தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து துரிதமாக பணிகளை மேற்கொள்ளும், எனக் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வனத்துறை அலுவலர் டி. வெங்கடேஷ், கிழக்கு மண்டல உதவி ஆணையாளர் ம.செல்வன் , எஸ்.எஸ்.வி.எம். பள்ளி செயலாளர் எஸ்.மோகன்தாஸ், சுற்றுச்சூழல் ஆர்வலர் அருண்தவசெல்வன், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் தன்னார்வ அமைப்பினர், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.