கோவை :மேட்டுப்பாளையத்தில் தடை செய்யபட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்த பிரபல லாட்டரி வியாபாரியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை :மேட்டுப்பாளையத்தில் தடை செய்யபட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்த பிரபல லாட்டரி வியாபாரியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி விற்பனை நடைபெற்று வருவதாக மேட்டுப்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில், மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சென்னகேசவன் மற்றும் பயிற்சி துணை கண்காணிப்பாளர் தேன்மொழி வேல், உதவி ஆய்வாளர் ராஜேந்திர பிரசாத் உள்ளிட்ட போலீசார் காட்டூர் சுதா காலனி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியே சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த சுதா காலனி பகுதியைச் சேர்ந்த முகமது இப்ராகிம் மகன் ரஹ்மத்துல்லா (41) என்பவரை மடக்கி விசாரணை செய்தனர். அப்போது, போலீசிடம் இருந்து தப்பிக்க முயன்றதுடன், உதவி ஆய்வாளர் ராஜேந்திர பிரசாத்துக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனையடுத்து, ரஹ்மத்துல்லா போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
பின்னர், அவரிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்தப் பகுதியில் பிரபல லாட்டரி வியாபாரியாக வலம் வந்தது தெரியவந்தது. மேலும், கைது செய்யப்பட்ட ரகமத்துல்லாவிடம் இருந்து தடை செய்யப்பட்ட 52 கேரளா லாட்டரி சீட்டுகள் மற்றும் 28 ஆயிரத்து 600 ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து, உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்து மற்றும் சட்டவிரோத லாட்டரி விற்பனை என வழக்குப்பதிவு செய்த போலீசார், மேட்டுப்பாளையம் நீதிமன்ற நீதிபதி சரவணன் பாபு முன்பு ஆஜர் செய்தனர். இதனைத் தொடர்ந்து, குற்றவாளிக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். பின்னர், ரஹமத்துல்லா கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.