கோவை : மேட்டுப்பாளையம் அருகே சாலை விரிவாக்கப்பணிக்காக வெட்டப்பட இருந்த 40 ஆண்டுகள் பழமையான மரம், தன்னார்வலர்களின் முயற்சியால் வேரோடு பிடுங்கி வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் மீண்டும் நடவு செய்யப்பட்டது.
கோவை : மேட்டுப்பாளையம் அருகே சாலை விரிவாக்கப்பணிக்காக வெட்டப்பட இருந்த 40 ஆண்டுகள் பழமையான மரம், தன்னார்வலர்களின் முயற்சியால் வேரோடு பிடுங்கி வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் மீண்டும் நடவு செய்யப்பட்டது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து பெரியநாயக்கன்பாளையம் வரை உள்ள 15 கிலோ மீட்டர் தொலைவிற்கு, தற்போது உள்ள இரு வழி சாலையை நான்கு வழிசாலையாக மாற்றும் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக, இந்த 15 கிலோ மீட்டர் தொலைவிற்கு ஏற்கனவே உள்ள சாலையின் இருபுறங்களிலும் உள்ள 100 ஆண்டுகள் பழமையான மரங்கள் வெட்டி அழிக்கப்பட்டு வருகின்றன. இந்த சாலை விரிவாக்கத்திற்காக நெடுஞ்சாலைத்துறை மூலம் 200-க்கும் மேற்பட்ட பழமையான வேம்பு, புளியன், ஆயமரம் என பல்வேறு மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், இந்த சாலை விரிவாக்கத்தில் வெட்டப்பட இருந்த 40 ஆண்டுகள் பழமையான ஆயமரத்தை தேர்ந்தெடுத்து, அதற்கு மறுவாழ்வு அழித்து உயிர்ப்பிக்கும் முயற்சியில் தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கோவையைச் சேர்ந்த சுற்றுச்சூழல் அமைப்பான ஓசை என்னும் தன்னார்வ அமைப்பு மற்றும் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த தன்னார்வலர்கள் வனத்துறையினருடன் இணைந்து இம்மரத்தைக் காக்க முயற்சி மேற்கொண்டுள்ளனர். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அனுமதியுடன் இன்று காரமடை அருகே சாலையின் ஓரத்தில் இருந்த 40 வயதான இந்த பிரமாண்ட ஆயமரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன், வேரோடு பூமியில் இருந்து அப்படியே மேல் நோக்கி எடுக்கப்பட்டது. மரம் வளர்ந்த இடத்தின் தாய் மண் மட்டும் அதன் வேருடன் ஒட்டி இருக்கும் வகையில், மெல்ல மெல்ல அகற்றப்பட்ட இம்மரம், பின்னர் கிரேன் மூலம் எடுத்து செல்லப்பட்டு மேட்டுப்பாளையம் - கோத்தகிரி சாலையில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான மரக்கிடங்கில் மீண்டும் பக்குவமாய் மறு நடவு செய்யப்பட்டது.
மிக மிக கவனத்துடன் மரத்தின் உயிர்த்தன்மை பாதிக்கப்படாமல் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேல் நடைபெற்ற இப்பணி நிறைவு பெற்றது. இதன்மூலம், வெட்டப்பட இருந்த மரத்திற்கு மறுவாழ்வு கிடைத்தது என்பதை விட, மரத்தைக் காக்க எடுக்கப்பட்ட இம்முயற்சி, மரங்களின் முக்கியத்துவத்தையும், அவற்றைக் காக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகவே அமைந்தது.