கோவை : தொடர் மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக கோவை குற்றாலம் அருவியில் 4-வது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவை : தொடர் மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக கோவை குற்றாலம் அருவியில் 4-வது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடும் வறட்சியின் காரணமாக கடந்த மார்ச் 25-ம் தேதி சூழல் சுற்றுலாப் பகுதியான கோவை குற்றாலம் மூடப்பட்டது. இந்த சூழலைப் பயன்படுத்தி சுற்றுலாப் பயணிகள் குளிக்கும் பகுதி சீரமைப்பு மற்றும் சாலைகள் சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிலையில், தென்மேற்கு பருவமழையினால் கோவை குற்றாலம் ஓரளவிற்கு நீர்வரத்தைப் பெற்றுள்ளதோடு, சீரமைப்பு பணிகளும் நிறைவடைந்த நிலையில், 108 நாட்களுக்குப் பிறகு புதுப்பொலிவுடன் கோவை குற்றாலம் கடந்த 12-ம் தேதி திறக்கப்பட்டது.
இந்த நிலையில், மேற்கு தொடர்ச்சி மழை அடிவாரப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க கடந்த 20-ம் தேதி தடை விதிக்கப்பட்டது. அருவியில் தொடர்ந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், தொடர்ந்து இந்த தடை 4-வது நாளாக இன்றும் நீடிக்கிறது. வரும் நாட்களில் பெய்யும் மழையின் அளவைப் பொருத்து கோவை குற்றாலம் அருவி திறக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.