கோவை : கோவை ரயில்நிலையத்தில் மூன்றாவது நடைமேடையில் ரயிலில் ஏறிய பெண் பயணியை டிக்கெட் பரிசோதகர் தகாத வார்த்தையில் பேசியதுடன், அவர் கொண்டு வந்தப் பொருட்களை எட்டி உதைத்து அவமானப்படுத்திய சம்பவம் அங்கிருந்தவர்களை அதிருப்தியில் ஆழ்த்தியது.
கோவை : கோவை ரயில்நிலையத்தில் மூன்றாவது நடைமேடையில் ரயிலில் ஏறிய பெண் பயணியை டிக்கெட் பரிசோதகர் தகாத வார்த்தையில் பேசியதுடன், அவர் கொண்டு வந்தப் பொருட்களை எட்டி உதைத்து அவமானப்படுத்திய சம்பவம் அங்கிருந்தவர்களை அதிருப்தியில் ஆழ்த்தியது.
கோவை ரயில் நிலையத்திற்கு தினமும் 70-க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. இதில், சாதாரண நாட்களில் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பயணிகளும், வாரவிடுமுறை நாட்களான சனி, ஞாயிறு மற்றும் விழா நாட்களில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகளும் பயணம் செய்கின்றனர். இப்படி வரும் பயணிகளிடம் சில டிக்கெட் பரிசோதகர்கள் மரியாதைக் குறைவாக நடந்து கொள்வாக ஏற்கனவே பல புகார்கள் வந்துள்ளன.

இந்த நிலையில், இன்று சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாரியம்மாள் என்பவர் வியாபார நிமித்தமாக கோவை வந்துள்ளார். இங்கு அவர் தனது பணியை முடித்து விட்டு, பிற்பகலில் தான் கொண்டு வந்த பாத்திரங்களுடன் கோவை சந்திப்பிலிருந்து சேலம் செல்ல ரயிலில் ஏறியுள்ளார். அப்போது, அங்கு வந்த டிக்கெட் பரிசோதகர் மாரியம்மாளிடம் டிக்கெட்டை கேட்டுள்ளார். இதற்கு மாரியம்மாள் டிக்கெட் தனது கணவரிடம் உள்ளதாகவும், அவர் முன்னே உள்ள ரயில் பெட்டியில் உள்ளார் என்றும் தெரிவித்துள்ளார். இதையடுத்து, டிக்கெட் பரிசோதகர்கள் மாரியம்மாளை ரயிலை விட்டு இறங்கும்படி வற்புறுத்தினர்.

பின்னர், மாரியம்மாள் தனது கணவரிடம் டிக்கெட்டை வாங்கி வருகிறேன் என கூறியபோது, (ஸ்கோடு டி.டி.ஆர்.) டிக்கெட் பரிசோதகர் பத்மகுமார், அவரை தகாத வார்த்தையில் பேசியதுடன், அவர் கொண்டு வந்த பாத்திரங்களையும் எட்டி உதைத்து அவமானப்படுத்தியுள்ளார். இதைக் கண்ட ரயில்வே தலைமை காவலர் வீரமுத்து, பயணிகளிடம் இப்படி நடந்து கொள்ளக் கூடாது என்றும், இது தவறான செயல் எனவும் அறிவுறுத்தியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த பத்மகுமார் என்ற டிக்கெட் பரிசோதகரான எனக்கு அறிவுரை சொல்கிறாயா..? என்று காவலரிடம் பொது இடத்தில் வைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், அவருக்கு மிரட்டல் விடும் தொனியிலும் பேசியுள்ளார். அப்போது, அங்கு வந்த மற்ற இரண்டு டிக்கெட் பரிசோதகர்களும், பத்மகுமாருக்கு ஆதரவாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட டிக்கெட் பரிசோதகர்களிடம், அனைத்தும் கேமராவில் பதிவாகி கொண்டிருப்பதாக ரயில்வே தலைமை காவலர் கூறியதையடுத்து, டிக்கெட் பரிசோதகர்கள் மூன்று பேரும் அந்த இடத்தைவிட்டு கலைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாரியம்மாள் கூறும்போது :- நான் முட்டை வியாபாரம் செய்து வருகிறேன். அதற்காக சேலத்தில் இருந்து கோவை வருவேன். இப்படி இருக்க இன்று சேலத்தில் இருந்து கோவை வந்து எனது பணிகளை முடித்துவிட்டு மீண்டும் சேலம் செல்வதற்காக நானும், என் கணவரும் வேறு வேறு ரயில் பெட்டிகளில் ஏறினோம். அப்போது, திடீரென டிக்கெட் பரிசோதகர் வந்த பொழுது, நான் என் கணவரிடம் டிக்கெட் இருக்கிறது என்றேன். ஆனால், அந்த பரிசோதகர்கள் என்னை ரயிலில் இருந்து இறக்கியதுடன், நான் கொண்டு வந்திருந்த பாத்திரங்களை எட்டி உதைத்தனர். மேலும், தகாத வார்த்தைகளிலும் பேசினர். டி.டி.ஆர். என்றால் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாமா..?, பொது இடத்தில் வைத்து இப்படி நடந்து கொண்டது எனக்கு மிகவும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது. அதேபோல, போலீசார் ஒருவர் வந்து நியாயத்தை கேட்டால் அவரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மிரட்டுகின்றனர், என்றார் வேதனையுடன்.
கோவை ரயில் நிலையத்தில் பெண் பயணி என்று கூட பாராமல் டிக்கெட் பரிசோதகர் ஒருவர் அவர் கொண்டு வந்த பொருட்களை காலால் எட்டி உதைத்து அவமானப்படுத்திய சம்பவம் அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.