கோவை : கோவை மாநகரில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோரிடம் போலீஸார் நடத்தும் பேச்சுக்கள் மற்றும் அபராதங்கள் தொடர்பான விவரங்களை நேரடியாக பதிவு செய்யும் 'பாடி ஒன் கேமராக்கள்' வழங்கும் நிகழ்வை மாநகர காவல் ஆணையாளர் துவங்கி வைத்தார்.
கோவை : கோவை மாநகரில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோரிடம் போலீஸார் நடத்தும் பேச்சுக்கள் மற்றும் அபராதங்கள் தொடர்பான விவரங்களை நேரடியாக பதிவு செய்யும் 'பாடி ஒன் கேமராக்கள்' (Body Worn Camera) வழங்கும் நிகழ்வை மாநகர காவல் ஆணையாளர் துவங்கி வைத்தார்.

போக்குவரத்து போலீசார் சாலை விதிகளை மீறும் வாகனங்களை தடுத்து நிறுத்தி வாகன சோதனை செய்வது வழக்கம். இப்படி வாகன சோதனைகள் செய்யும் பொழுது போக்குவரத்து போலீசாருக்கும், வாகன ஓட்டிகளுக்கும் அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்படுகின்றன. இந்த வாக்குவாதங்கள் கடைசியில் விவாதப் பொருளாக மாறுகிறது. ஆகவே, இந்த விவகாரத்தை தடுக்கும் நோக்கில் போக்குவரத்து காவல்துறையினரின் நடவடிக்கையையும், வாகன ஓட்டியின் நடவடிக்கையையும் நேரடியாக கண்காணிக்கும் வகையில் 'பாடி ஒன் கேமராக்கள்' என்ற முறை நடைமுறைக்கு வந்துள்ளது.
சிறிய அளவில் உள்ள இந்த கேமராவின் உதவியுடன் வாகன ஓட்டிகள் செய்யும் குற்றங்கள் மற்றும் போக்குவரத்து போலீசாரின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளின் உண்மைத் தன்மையை அறிய முடியும்.

இந்த நிலையில், கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உயிர் அமைப்பின் உதவியுடன் 70 போக்குவரத்து போலீசாருக்கு 'பாடி ஒன் கேமராக்கள்' இன்று வழங்கப்பட்டன. இந்த கேமராக்களை சாலை விதிகளை மீறுவோருக்கு அபராதம் வசூலிக்கும் போதும், போக்குவரத்தைச் சீர்படுத்தும்போதும் கண்டிப்பாக உடலில் பொருத்திக்கொள்ள வேண்டும் என மாநகர காவல் ஆணையாளர் அறிவுறுத்தியுள்ளார். இந்த கேமராக்கள் வழங்கும் நிகழ்வை மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் துவங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் உயிர் அமைப்பின் நிர்வாகி ராஜசேகரன், துணை ஆணையாளர்கள் பெருமாள், பாலாஜி சரவணன், போக்குவரத்து உதவி ஆணையாளர் ராஜ் கண்ணா, நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையாளர் (பொறுப்பு) வெற்றிச்செல்வன் உள்ளிட்ட போக்குவரத்து காவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.