கோவை : மத்திய அரசின் சார்பில் நடைபெற்ற ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்' போட்டியில் கோவை அரசினர் பொறியியல் கல்லூரி மாணவர்கள் குறைந்த விலையில் பெட்ரோலை சேமிக்க உதவும் மெஷினை கண்டுபிடித்து சாதனை படைத்தனர்.
கோவை : மத்திய அரசின் சார்பில் நடைபெற்ற ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்' போட்டியில் கோவை அரசினர் பொறியியல் கல்லூரி மாணவர்கள் குறைந்த விலையில் பெட்ரோலை சேமிக்க உதவும் மெஷினை கண்டுபிடித்து சாதனை படைத்தனர்.

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் சார்பில் 'ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்' 3-ம் பதிப்பு வன்பொருள் (ஹார்டுவேர்) என்ற பிரிவில் நாடு முழுவதும் 18 மையங்களில் கடந்த 8-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடந்தது. இதில், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழில்நுட்ப கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் காசியாபாத்தில் அமைந்துள்ள கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் நடந்த இறுதிப் போட்டியில் கோவை அரசினர் பொறியியல் கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். இதில், 4-ம் ஆண்டு இயந்திரவியல் துறை மாணவர்கள் அபிதா, பாலகுமரன், பரணி, பவுன்பாரத், கார்த்திக், மவுளிதரன் ஆகியோர் பங்கேற்றனர். இவர்கள், எரிபொருள் நிலையங்களில் குறைந்த செலவில் நீராவி சிஸ்டம் அமைப்பது என்ற தலைப்பில் காம்ப்ளக்ஸ் பிரிவில் பங்கேற்று வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் ருபாய் பரிசு வழங்கப்பட்டது.
இது குறித்து மாணவர்கள் கூறியதாவது :- பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருளை நிரப்பும்போது ஏற்படும் ஆவியாதலை மீண்டும் அதே எரிபொருளாக மாற்றி, ஆவியாதலை தடுத்து சுற்றுப்புற சூழலுக்கு பாதிக்காத வண்ணமாகவும், அதேபோல வேஸ்ட்டேஜ் தடுக்கும் விதமாகவும், பெட்ரோல் பம்ப் மாதிரியைக் கண்டுபிடித்துள்ளோம். இந்த பம்ப் முறையாக சந்தையில் வரும் போது 15 முதல் 16 லட்சம் செலவு செய்து வாங்கும் பம்புக்கு மாறாக, 30 ஆயிரத்துக்கு குறைந்த விலையில் வாங்கலாம். ஒரு லிட்டர் பெட்ரோல் போடும் போது 10 சதவீதம் வரை ஆவியாவதால் அதனை வெகுவாக குறைப்பதற்கு நாங்கள் உருவாக்கிய பம்ப் எரிபொருள் வீணாதலையும் தடுக்கும்.

மேலும், இந்த அரிய வகை கண்டுபிடிப்பு முக்கிய எண்ணை நிறுவனமான இண்டியன் ஆயில் கார்ப்பரேசன் ஆதரித்துள்ளது. இது தங்களது சாதனையாகக் கருதுகிறோம். வரும் காலங்களில் பல்வேறு கண்டுபிடிப்புகளில் ஈடுபட உள்ளோம், என மாணவர்கள் தெரிவித்தனர். இதனிடையே, குறைந்த செலவில் இந்த மெஷினை தயாரித்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை கல்லூரியின் முதல்வர், ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.