கோவை : அஞ்சல் துறை தேர்வில் இந்தி மொழியிருப்பதை மாற்ற வேண்டும் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு : கோவையில் புத்தக வெளியீட்டு விழாவில் அமைச்சர் மா.பா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
கோவை : அஞ்சல் துறை தேர்வில் இந்தி மொழியிருப்பதை மாற்ற வேண்டும் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு : கோவையில் புத்தக வெளியீட்டு விழாவில் அமைச்சர் மா.பா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் பந்தயசாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் நீலமலைப்பூக்காரி என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இப்புத்தகத்தை சபிதா போஜன் எழுதியுள்ளார். இந்த கவிதை புத்தகமானது இயற்கை மற்றும் வாழ்வியல் குறித்து எழுதப்பட்டுள்ளது. இவ்விழாவில் தமிழ் ஆட்சி மொழி, பண்பாட்டு, மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மா.பா பாண்டியராஜன் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார். மேலும், புத்தக பதிப்பாளர்கள் மற்றும் வாசிப்பாளர் பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் கூறியதாவது :-
தோடர், படுகர் மொழிகளை மீட்டெடுக்கும் பணியை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. இதற்காக ஒரு மில்லியன் டாலர் வழங்குமாறு யூனஸ்கோவிடம் தமிழக அரசு கேட்டுள்ளது. இரு மொழிகளையும் பாதுகாக்க யூனஸ்கோவிடம் தமிழக அரசு உதவி கேட்டுள்ளது. உதகையில் பல பாறை ஒவியங்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன. பாறை ஒவியங்களை பாதுகாப்பு பணி குறித்து தமிழக அரசு அறிவிக்கும். தமிழர்களின் தொன்மையை பறை சாற்றும் ஒலைச்சுவடி, செப்பேடு, பாறை ஒவியங்கள் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும். கீழடி அகழ்வாய்விற்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை. இருப்பினும், மத்திய அரசின் உதவியை கேட்போம். எந்த ஆண்டும் இல்லாத வகையில் தொல்லியல், கலை பண்பாட்டு துறைக்கு 3 மடங்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அஞ்சல் துறை தேர்வில், இந்தி வந்துள்ளது தான் கேள்விக்குறி..? இதை மாற்ற வேண்டுமென்பதே தமிழக அரசின் நிலைப்பாடு. இப்பிரச்சனையில் ஆர்ப்பாட்டம், ஆரவாரம் இல்லாமல் அமைதியாக சாதிக்கும். அஞ்சலக தேர்வில் கால்வாசி கேள்வி இந்தியில் கேட்பதில், தமிழக அரசிற்கு உடன்பாடு கிடையாது. இது மாற்றப்படும் என நம்புகிறேன். இந்தி மட்டும் என்பது தவறான நிலைப்பாடு. தமிழக அரசு இரு மொழி கொள்கையில் உறுதியாக உள்ளது. தேசிய கல்வி கொள்கையில் மும்மொழிகள் படிக்க வேண்டுன்பது ஆய்வுக்கு உட்பட்டது, என்றார்.