கோவை : பொள்ளாச்சி பகுதியில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் திருநாவுக்கரசின் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று திடீர் சோதனை மேற்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை : பொள்ளாச்சி பகுதியில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் திருநாவுக்கரசின் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று திடீர் சோதனை மேற்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியைச் சேர்ந்த திருநாவுக்கரசு மற்றும் அவரது நண்பர்கள், முகநூல் மூலம் கல்லூரி மாணவிகளை குறிவைத்து பழகி ஆபாச படம் எடுத்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பொள்ளாச்சி கிழக்கு காவல்நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் புகார் அளித்திருந்தார்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த புகாரையடுத்து, சம்பந்தப்பட்ட சதீஷ், சபரி ராஜன் மற்றும் வசந்தகுமார் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்து, இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாகக் கருதப்பட்ட திருநாவுக்கரசு, மணிவண்ணன் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட போலீசார் விசாரித்து வந்த நிலையில், சி.பி.சி.ஐ.டி.யிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர், மீண்டும் பல்வேறு கோரிக்கைகளையடுத்து, சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதில், சி.பி.ஐ. அதிகாரிகள் பொள்ளாச்சியிலேயே தங்கியிருந்து தொடர்ந்து பல்வேறு கட்டங்களாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்ட 5 பேரும் கோவை மத்திய சிறையில் இருந்து பாதுகாப்பு காரணமாக சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும், சி.பி.ஐ. அதிகாரிகள் முதற்கட்டமாக, பாலியில் வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் குற்றம் என தெரிந்தும் குற்றம் செய்ததாக அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
இந்த நிலையில், இன்று சி.பி.ஐ. அதிகாரிகள் பொள்ளாச்சி மாக்கினாம்பட்டி பகுதியில் உள்ள திருநாவுக்கரசு வீட்டில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, வீட்டில் இருந்த அவரது தந்தை கனகராஜ் மற்றும் தாயார் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டதாகத் தெரிகிறது. மேலும், வீட்டில் தடயங்கள் ஏதேனும் இருக்கிறதா..? என்ற சந்தேகத்தில் மீண்டும் சோதனை செய்ததாகக் கூறப்படுகிறது. சுமார் அரை மணி நேரம் நடந்த ஆய்வுக்குப்பின், சி.பி.ஐ. அதிகாரிகள் கிளம்பி சென்றனர். சி.பி.ஐ. அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்த பின்னர் மீண்டும் திருநாவுக்கரசு வீட்டில் ஆய்வு செய்தது பாலியல் வழக்கு மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது என்பதை காட்டியுள்ளது.