கோவை : சரவணம்பட்டி அருகே உள்ள கீரணத்தம் பகுதியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்து கொண்டிருந்த பணியாளர்கள் 3 பேர் விஷவாயு தாக்கி பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை : சரவணம்பட்டி அருகே உள்ள கீரணத்தம் பகுதியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்து கொண்டிருந்த பணியாளர்கள் 3 பேர் விஷவாயு தாக்கி பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை கணபதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரது வெண்பன்றி வளர்ப்பு பண்ணை கீரணத்தம் அருகே உள்ள லட்சுமி கார்டனில் உள்ளது. இந்த பண்ணையில் உள்ள பன்றிகளின் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய கோவில்மேட்டை சேர்ந்த 6 பேர் வந்துள்ளனர். இன்று காலை சுமார் 11 மணி அளவில் ராசப்பன் (32), வேடியப்பன் (30) மற்றும் மற்றொரு வேடியப்பன் (29) என மூன்று பேரும் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய உள்ளே இறங்கியுள்ளனர். அப்போது, எதிர்பாராதவிதமாக முதலில் ராசப்பன் விஷவாயு தாக்கி உள்ளே விழுந்தார். இதையடுத்து, அருகே இருந்த மற்ற இருவரும் ஒருவர் பின் ஒருவராக உள்ளே இறங்கினர். இதில், விஷவாயு தாக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

இதையடுத்து, தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் கழிவு நீர்த்தொட்டிக்குள் இறந்த 3 பேரின் உடல்களையும் மீட்டனர். இந்த சம்பவம் குறித்து கோவில்பாளையம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கழிவு நீர்த் தொட்டிக்குள் இறங்கிய மூன்று பேரும் துப்புரவு பணி தெரியாதவர்கள் என தெரியவந்துள்ளது. அதேபோல, இவர்கள் கட்டிட வேலை போன்ற கிடைக்கும் வேலையை செய்து வருவதும் தெரியவந்துள்ளது.
இதனிடையே, பாதுகாப்பு விதிகளை மீறி கழிவுநீர்த் தொட்டிக்குள் பணியாளர்களை இறங்க அனுமதி கொடுத்த பண்ணையின் உரிமையாளர் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, பலியான தொழிலாளர்களின் குடும்பத்திற்கு பண்ணை உரிமையாளர் இழப்பீடு தருபவர்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது. தமிழக அரசு மற்றும் மாநகராட்சி சார்பில் போதுமான விழிப்புணர்வு இல்லாததே தொடரும் உயிரிழப்புகளுக்கு காரணமாக உள்ளது என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இது குறித்து தமிழக அரசின் ஆதிதிராவிடர் நல குழு உறுப்பினர் செல்வம் கூறியதாவது ;- மனிதக்கழிவுகளை மனிதனே அல்ல கூடாது. கழிவுநீர் தொட்டியை பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி சுத்தம் செய்யக்கூடாது என்று சிறப்புச் சட்டங்கள் உள்ளன. அதேபோல, தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் இதற்கான விழிப்புணர்வுகளை தொடர்ந்து செய்து வருகிறது. இருப்பினும் நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி ஆகிய பகுதிகளில் விதியை மீறி கழிவுநீர்த் தொட்டிக்குள் இறங்கி விடுகின்றனர். இதனால், அடிக்கடி உயிரிழப்புகள் ஏற்படுகிறது. அரசின் சார்பில் இழப்பீடு தருவது போல சம்பந்தப்பட்ட நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு தரவேண்டும். அதேபோல, மாவட்ட நிர்வாகம் மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளுகின்றனரா என ஏற்கனவே அமைக்கப்பட்ட குழுக்களைக் கொண்டு கண்காணிக்க வேண்டும். அதற்கான மாத கூட்டங்களை மாவட்ட நிர்வாகம் முறையாக நடத்த வேண்டும், என தெரிவித்தார்.