கோவை : காந்திபுரம் அருகே உள்ள ராம்நகர் பகுதியில் உரிமம் இன்றி இருசக்கர வாகனத்தை வாடகைக்கு ஓட்டி வந்ததாகக் கூறி ஆட்டோ ஓட்டுனர்கள் பைக் டாக்ஸி நிறுவனத்தினரை சிறை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
கோவை : காந்திபுரம் அருகே உள்ள ராம்நகர் பகுதியில் உரிமம் இன்றி இருசக்கர வாகனத்தை வாடகைக்கு ஓட்டி வந்ததாகக் கூறி ஆட்டோ ஓட்டுனர்கள் பைக் டாக்ஸி நிறுவனத்தினரை சிறை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
ரேப்பிட்டோ பைக் டாக்ஸியானது கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு ஆண்டு காலமாக செயல்பட்டு வருகிறது. ஆனால், உரிய உரிமம் இன்றி இருசக்கர வாகனத்தில் பைக் டேக்ஸி பயன்படுத்தி வருவது போக்குவரத்து விதிமீறல் என வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் தெரிவித்துள்ளது. இருப்பினும், தொடர்ந்து இந்த பைக் டேக்ஸியானது செயல்பட்டு வருகிறது. இது ஆட்டோ ஓட்டுனர் மற்றும் கால் டாக்ஸி ஓட்டுனர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பைக் டேக்ஸிகளை ஆங்காங்கே ஆட்டோ ஓட்டுநர்களும், கால் டாக்ஸி ஓட்டுநர்களும் வழிமறித்து பிடித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைக்கின்றனர்.
இந்த நிலையில், இன்று ஆட்டோ ஓட்டுனர்கள் சிலர் காந்திபுரம் அருகே உள்ள ராம்நகர் பகுதியில் உரிமம் இன்றி ஓட்டி வந்த பைக் டாக்ஸிகளை சிறைப்பிடித்து கோவை காந்திபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் கூறியதாவது :- ஏற்கனவே ஆட்டோ தொழில் முற்றிலும் ஒழிந்து வருகிறது. இதில், ஏதோ கொஞ்சம் கொஞ்சம் வாடகையை ஓட்டி எங்கள் வாழ்வாதாரத்தை நடத்தி வருகிறோம். இந்த நிலையில், பைக் டாக்ஸி என்ற பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தினர் எங்கள் வாழ்வாதாரத்தில் இடைஞ்சல் ஏற்படுத்துகின்றனர். அதேபோல, எந்தவித பாதுகாப்பும் இல்லாத இந்த பயணத்தினால், பொதுமக்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகவே உள்ளது. ஆகவே, இந்த நிறுவனத்தை தடை செய்ய வேண்டும், எனக் கூறினார்.