கோவை : அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் சாதிக்க முடியாததை சந்திராயனை விண்வெளிக்கு அனுப்பி, அரசு பள்ளியில் படித்த இந்திய விஞ்ஞானிகள் சாதித்துள்ளனர் என கோவையில் மயில்சாமி அண்ணாதுரை பெருமிதம் தெரிவித்துள்ளார்.
கோவை : அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் சாதிக்க முடியாததை சந்திராயனை விண்வெளிக்கு அனுப்பி, அரசு பள்ளியில் படித்த இந்திய விஞ்ஞானிகள் சாதித்துள்ளனர் என கோவையில் மயில்சாமி அண்ணாதுரை பெருமிதம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அரசு பள்ளிகளை தனியாருக்கு தத்து கொடுக்கும் முறையை ரத்து செய்யக்கோரியும், அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்பக்கோரியும் இந்திய மாணவர் சங்கத்தினர் கோவை, கடலூர், சென்னை, கன்னியாகுமரி உள்ளிட்ட நான்கு இடங்களில் சைக்கிள் பேரணி நடத்துகின்றனர். இதன் ஒருபகுதியாக, கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் முன்பு துவங்கிய சைக்கிள் பேரணியை இஸ்ரோவின் முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்தப் பேரணி ஆறு நாட்களில் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர் வழியாக திருச்சியை அடைகிறது.

இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது :- தமிழகத்தில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் சாதிக்க முடியாததை சந்திராயனை விண்வெளிக்கு அனுப்பி அரசுப் பள்ளியில் படித்த இந்திய விஞ்ஞானிகள் சாதித்துள்ளனர். அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்குத் தகுதியும், திறமையும் அதிகமாக உள்ளது. ஒவ்வொரு மாணவனுக்காகவும் அரசு ரூ. 30,000 வரை செலவு செய்கிறது. பல்வேறு அமைப்புகளும், முன்னாள் மாணவர்களும் அரசு பள்ளிகளுக்கு பல உதவிகளை செய்து வருகின்றனர். இதனால், கல்வித்தரம் உயர்ந்து வருகிறது. மாணவர்களின் திறன் உயர்வதோடு, அடுத்த தலைமுறைக்கும் அது உதவியாக உள்ளது. அரசு பள்ளியிலும், அன்னைத் தமிழிலும் தங்கள் பிள்ளைகள் படிப்பதை ஊக்கிவிக்க வேண்டும், என அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், அகில இந்திய மாணவர் இயக்கத்தின் தலைவர் ஷானு, ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பாலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.