கோவை : மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் கொடுத்ததாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
கோவை : மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் கொடுத்ததாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் சுதந்திரம் பெற்ற இந்தியாவின் முதல் இந்து தீவிரவாதி கோட்சே என அரவக்குறிச்சி சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சரத்தின் போது பேசியிருந்தார். அதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்தது. இதனையடுத்து, தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கடந்த 13-ஆம் தேதி ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தேர்தலின் போது மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனின் நாக்கை அறுப்பேன் என கூறியிருந்தார். அதேபோல, மக்கள் அனைவரும் அவருடைய நாக்கை அறுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இதனையடுத்து, கரூரில் பரப்புரையின் போது கமல்ஹாசன் மீது முட்டை மற்றும் கல்வீச்சு சம்பவம் நடைபெற்றுள்ளது.
இந்த நிலையில், கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் கொடுத்ததாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

மேலும், இந்த சம்பவம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளதாகவும், அதிகாரத்தில் இருக்கும் அமைச்சரே பொறுப்பற்ற முறையில், அரசியல் சாசனத்திற்கு எதிராக மற்ற கட்சியின் தலைவர் மீது தாக்குதல் நடத்துவேன் எனக் கூறுவது ஜனநாயகத்திற்கு எதிரானது எனக் குறிப்பிட்டுள்ளனர். ஆகவே, கோவை மாநகர காவல் ஆணையர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என மக்கள் நீதி மய்யத்தினர் புகாரில் தெரிவித்துள்ளனர்.