திருப்பூர் : திருப்பூர் மக்களவை தொகுதியில் நாளை நடக்கும் வாக்கு எண்ணும் பணிக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது
திருப்பூர் : திருப்பூர் மக்களவை தொகுதியில் நாளை நடக்கும் வாக்கு எண்ணும் பணிக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது
திருப்பூர் மக்களவை தொகுதியானது, திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபி செட்டிபாளையம் என 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி வரையறுக்கப்பட்டுள்ளது தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 18-ஆம் தேதியன்று மக்களவை தேர்தல் நடைபெற்றது. இதில், திருப்பூர் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் எம்.எஸ்.எம். ஆனந்தன், தி.மு.க. கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சுப்பராயன், அ.ம.மு.க. கட்சியின் சார்பில் எஸ்.ஆர். செல்வம், மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளராக சந்திரகுமார், நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஜெகநாதன் உள்ளிட்ட 12 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இதில், திருப்பூர் மக்களவைத் தொகுதியில் 15 லட்சத்து 29 ஆயிரத்து 830 வாக்குகள் உள்ள நிலையில், தேர்தல் அன்று 5 லட்சத்து 66 ஆயிரத்து 400 ஆண் வாக்காளர்களும், 5 லட்சத்து 49 ஆயிரத்து 365 பெண் வாக்காளர்களும் 28 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 11 லட்சத்து 15 ஆயிரத்து ஒரு வாக்காளரும் வாக்களித்தனர். தேர்தல் முடிவடைந்த ஏப்ரல் 18ஆம் தேதியன்று அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் மூடி சீல் வைக்கப்பட்டு, திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள எல்.ஆர்.ஜி மகளிர் கலைக் கல்லூரியில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. அனைத்து கேமராக்களின் தொகுப்புகளையும் தேர்தல் நடத்தும் அலுவலர் அறையில் பார்ப்பதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
கல்லூரியின் நுழைவாயிலில் இருந்து 100 மீட்டர் தொலைவில் குறியீடு செய்யப்பட்டு தேர்தல் அலுவலர்கள் தவிர்த்து மற்ற வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு சுற்று முடிவினையும் அறிவிக்க தகுந்த வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதில், அஞ்சல் வாக்குகள் அனைத்தும் வருவாய்த்துறை அலுவலர் அறையில் வைத்து எண்ணுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.