கோவை : மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுவதையொட்டி, வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஜி.சி.டி கல்லூரி முன்பு போலீசார், ராணுவத்தினர் என பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கோவை : மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுவதையொட்டி, வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஜி.சி.டி கல்லூரி முன்பு போலீசார், ராணுவத்தினர் என பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கோவை மக்களவை தொகுதிக்கான வாக்குப்பதிவு மற்றும் சூலூர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்த பின்னர், வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டு, தடாகம் சாலையில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையமான அரசு தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டு உள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இக்கல்லூரி வளாகத்தில் துணை ராணுவத்தினர், போலீஸார் என மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், நாளை வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இதையொட்டி, வாக்கு எண்ணிக்கை மையத்தில் மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் மற்றும் சட்டம் ஒழுங்கு காவல் துணை ஆணையாளர் பாலாஜி சரவணன் தலைமையின் கீழ் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்கள், தலைமைக்காவலர்கள், காவலர்கள், ஆயுதப்படை போலீஸார், ஊர்காவல் படையினர் என 1,600 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

அதேபோல, அரசு தொழில்நுட்பக்கல்லூரி வளாகம் மற்றும் வெளிப்பகுதிகளில் 2 ஷிப்ட் அடிப்படையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்கள் இன்று மாலை முதலே பாதுகாப்பு பணியில் ஈடுபட தொடங்கியுள்ளனர். வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் நுழைபவர்கள் கடும் சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுவர். உரிய அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டுமே வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் அனுமதிக்கப்படுவர். வாக்கு எண்ணிக்கையன்று, அரசு தொழில்நுட்பக் கல்லூரி முன்பு அரசியல் கட்சியினர் திரண்டு வர வாய்ப்புள்ளது. எனவே, அங்கு போலீஸார் கண்காணிப்பு அதிகரிக்கப்படவுள்ளது. அதேபோல, அவ்வழியாக போக்குவரத்தும் மாற்றமும் செய்யப்பட உள்ளது.