கோவை : கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்னும் சில நாட்களில் திறக்கப்பட உள்ள நிலையில், தனியார் பள்ளி வாகனங்களின் தரம் மற்றும் அவற்றின் தகுதிச் சான்று குறித்து மேட்டுப்பாளையத்தில் வட்டார போக்குவரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை : கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்னும் சில நாட்களில் திறக்கப்பட உள்ள நிலையில், தனியார் பள்ளி வாகனங்களின் தரம் மற்றும் அவற்றின் தகுதிச் சான்று குறித்து மேட்டுப்பாளையத்தில் வட்டார போக்குவரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக அரசின் உத்தரவின் பேரில் ஆண்டுதோறும் தனியார் பள்ளிகள் மாணவ, மாணவிகளை அழைத்து வர பயன்படுத்தும் பேருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தி, அவற்றின் தரத்தை பரிசோதனை செய்யப்பட்டு சான்று வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அன்னூர் தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் 100-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளின் பேருந்துகள் இன்று மேட்டுப்பாளையம் வட்டார போக்குவரத்து அதிகாரிகளால் சோதனை செய்யப்பட்டது. சுமார் 400-க்கும் மேற்பட்ட பேருந்துகள் மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு மைதானத்திற்கு வரவழைக்கப்பட்டு, வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன் மற்றும் வட்டாட்சியர் ரங்கராஜ் ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

பேருந்தில் பொருத்தப்பட்டுள்ள வேகக்கட்டுபாட்டு கருவி, முதலுதவி பெட்டி, அவசரகால வழி, தரைத்தளம், படிக்கட்டுகள், தீயணைப்பு கருவிகள் குறித்து ஒவ்வொரு பேருந்துகளிலும் ஆய்வு செய்த அதிகாரிகள், மருந்துப்பெட்டிகளில் உள்ள மருந்துகள் மற்றும் தீயணைப்பான் கருவிகளின் காலாவதி தேதிகள் குறித்தும் ஆய்வு நடத்தினர். பின்னர், ஆர்.டி.ஓ. தியாகராஜன் சில பேருந்துகளின் உறுதித்தன்மையை சோதிக்க பேருந்தினை ஓட்டுநரின் சீட்டில் தானே அமர்ந்து இயக்கி சோதனை செய்தார். மேலும், ஓட்டுநர்களின் உரிமம் பள்ளி பேருந்துகளின் தரம் மற்றும் தகுதிச்சான்று குறித்து ஆய்வு செய்யப்பட்டதுடன், பேருந்துகளை மாணவர்களை ஏற்றிக்கொண்டு செல்லும் போது பாதுகாப்பாக இயக்குவது, மித வேகத்தில் செலுத்துவது குறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஓட்டுநர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினர்.

அத்துடன் திடீரென பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக சுதாரித்து செயல்படும் முறை குறித்து ஓட்டுநர்களுக்கு மேட்டுப்பாளையம் தீயணைப்புத்துறை அதிகாரிகள் செயல்முறை விளக்கம் அளித்தனர். இந்த நிகழ்வில் சுமார் 500 பேருந்து ஓட்டுநர்கள் கலந்துகொண்டனர்.