கோவை : சிங்காநல்லூர் குளப்பகுதியில் வளர்ந்து வரும் ஆக்கிரமிப்பு தாவரங்களின் நன்மைகளையும், தீமைகளையும் விளக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவை : சிங்காநல்லூர் குளப்பகுதியில் வளர்ந்து வரும் ஆக்கிரமிப்பு தாவரங்களின் நன்மைகளையும், தீமைகளையும் விளக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவை மாநகராட்சி மற்றும் நகர்ப்புற பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் கல்வி மையத்தின் சார்பில் சிங்காநல்லூர் குளப்பகுதியில் இயற்கை கல்விக்கான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நேற்று அதிகாலை குளப்பகுதியின் கரைப்பகுதியில் ஆக்கிரமித்துள்ள தாவரங்களைப் பற்றி விளக்கும் இயற்கை நடைப்பயணம் நிகழ்ச்சி நடைபெற்றது. இது 14-வது நிகழ்ச்சியாகும். இதில், வன மரபியல் மற்றும் மர இனப்பெருக்க கல்வி நிறுவனத்தின் விஞ்ஞானி ஏ. ராஜசேகரன் கலந்து கொண்டார். அப்போது, ஆக்கிரமிப்பு தாவரங்கள் பற்றியும், அவற்றின் குணாதிசயங்கள் குறித்தும் அவர் எடுத்துரைத்தார். ஜூளிப்லோரா, லந்தனா காமரா போன்ற தாவரங்கள் பறவைகளுக்கு எவ்வாறு பயன்படுகிறது என்பது பற்றியும், இயற்கை தாவரங்களுக்கு விளைவிக்கும் அச்சுறுத்தல் குறித்தும் விரிவாக விளக்கினார்.

"இதுபோன்ற ஆக்கிரமிப்பு தாவரங்கள் தேவையில்லாமல் வளர்கின்றன. குறைந்த காலத்தில் பல்வேறு பகுதிகளுக்கு பரவி விடுகின்றன. மேலும், உள்ளூர் தாவரங்களின் வளர்ச்சியை தடுக்கிறது. மேலும், ஜூளிப்லோரா தாவரங்கள் விறகுகளாகவும், லந்தனா காமரா தாவரங்கள் பறவைகள் இனப்பெருக்கம் செய்யவும் பயன்படுகின்றன. யானைகளின் முக்கிய வாழ்விடமாக இருக்கும் முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் பந்திபூர் போன்ற பகுதிகளில் புற்களுடன் சேர்ந்து லந்தனா காமரா தாவரங்களும் வளருவதால், இவை மறைமுகமாக மனித - யானைகள் மோதலுக்கு வழிவகுக்கின்றன," என்றார் விஞ்ஞானி ஏ. ராஜசேகரன்.

மேலும், இது மாதிரியான ஆக்கிரமிப்பு தாவரங்களை முழுவதுமாக ஒழிக்க முடியாது என்றும் ஆனால், அவசியம் இல்லாத பகுதிகளில் பரவுவதை அகற்றுவதன் மூலம் அவற்றை கட்டுப்படுத்தலாம் என நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் அவர் கேட்டுக் கொண்டார்.

அடுத்த நிகழ்ச்சி வரும் ஜுன் 2-ம் தேதி நடக்கிறது.