கோவை : ரத்தினபுரி அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் பேட்டரி திருட முயன்ற நபரை கையும் களவுமாக பிடித்த பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
கோவை : ரத்தினபுரி அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் பேட்டரி திருட முயன்ற நபரை கையும் களவுமாக பிடித்த பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
கோவையில் மதிய நேரங்களில் வீட்டில் வைத்திருக்கும் பொருட்கள் திருடப்படுவது வாடிக்கையாக உள்ளது. குறிப்பாக, கையில் கிடைக்கும் பொருட்களை திருடி செல்வதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், இன்று மதியம் ரத்தினபுரி செக்கான் தோட்டம் பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரது வீட்டில் புகுந்த திருடன், யூ.பி.எஸ். பேட்டரியை எடுத்து தனது சைக்கிளில் வைத்து கொண்டு சென்றுள்ளான். இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் இப்பகுதியில் அடிக்கடி பேட்டரிகள் திருடுபோவதால் சந்தேகமடைந்து அவனைப் பிடித்து விசாரித்துள்ளனர். இதில், அந்த நபர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதையடுத்து அவரை கட்டிவைத்து தர்ம அடி கொடுத்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து, தகவல் அறிந்து வந்த போலீசார் பேட்டரி திருடிய நபரை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதில், போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், இவர் உக்கடம் ஹவுசிங் யூனிட் பகுதியைச் சேர்ந்த அப்துல் சுகானியின் மகன் ஜானீர் உசேன் என்பதும், இவர் பழைய இரும்புகளை வாங்கி விற்கும் தொழில் செய்து வருவதும், இதே பகுதியில் இதற்கு முன்பும் பேட்டரிகளை திருடியதும் தெரியவந்தது. பின்னர், வேறு ஏதேனும் வழக்குகளில் ஜானீர் உசேனுக்கு தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.