கோவை : கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காட்டுயானை தாக்கி விவசாய கூலி தொழிலாளி படுகாயமடைந்தார்.
கோவை : கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காட்டுயானை தாக்கி விவசாய கூலி தொழிலாளி படுகாயமடைந்தார்.
மேட்டுப்பாளையம் - உதகை சாலையில் உள்ள கல்லார் பகுதிகளில் கடந்த சில தினங்களாக காட்டுயானைகள் நடமாட்டம் அதிமாக உள்ளது. வனப்பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், தண்ணீரினை தேடி யானை உள்ளிட்ட வன விலங்குகள் பவானி ஆறு மற்றும் கல்லார் நீரோடைகளை தேடி வரத்து வங்கியுள்ளன. இந்த நிலையில், இன்று அதிகாலை கல்லார் தூரிப்பாலம் அருகே விவசாய நிலத்தில் ஒற்றை காட்டுயானை நுழைந்துள்ளது. அப்போது, விவசாய பணிக்காக சென்ற கிருஷ்ணமூர்த்தி என்ற கூலி தொழிலாளியை அந்த காட்டுயானை துரத்தி தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் கூச்சலிடவே, காட்டு யானை அவரை விட்டு விட்டு அருகில் இருந்த வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது.
பின்னர், தலைப்பகுதியில் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய கிருஷ்ணமூர்த்தியை அருகில் இருந்தவர்கள் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது, கோடை காலம் என்பதால் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் இருக்கும். எனவே, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.