கோவை : காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி பிரதமரான மறுநாளே, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் முதலமைச்சர் ஆவார் என முன்னாள் மத்தியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
கோவை : காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி பிரதமராகும் போது, தமிழகத்தின் முதலமைச்சராக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பொறுப்பேற்பார் என கருமத்தம்பட்டியில் பேசிய முன்னாள் மத்தியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் சூலூர் இடைத்தேர்தல் தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமியை ஆதரித்து பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் மத்தியமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது :- இடைத்தேர்தல் நடைபெறுவதை தடுக்க அ.தி.மு.க. பல்வேறு முயற்சிகளை செய்தது. நீதிமன்ற உத்தரவுகளால் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. சூலூர் தொகுதி மக்களுக்கு நாடாளுமன்றம் மற்றும் இடைத்தேர்தல் என இரண்டு வாக்குகள் என்பது துப்பாக்கியில் இரண்டு தோட்டாக்காள் போல, எதிரி குத்துயிரும், கொலையுயிருமாக இருக்கக்கூடாது என்பதற்காக இரண்டு தோட்டாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

வெறும் 3 நிமிடத்தில் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி முடிவானது. தி.மு.க. - காங்கிரஸ் கட்சிகள் 6 முறை கூட்டணி அமைத்து 6 முறையும் வென்றுள்ளது. அந்த வரலாறு இந்தத் தேர்தலிலும் தொடரும். மோடி எதிர்ப்பு, பா.ஜ.க. எதிர்ப்பு மாநிலத்தில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. பெரியார், காமராசர், அண்ணா, கருணாநிதி ஆகியோர் தமிழ் சமுதாயத்தை வடிவமைத்து தந்தார்கள். மாநில உரிமைகளுக்கு, தமிழர்களுக்கு விரோதமான அரசு மோடி அரசு. ஒற்றை கலாச்சாரம், பண்பாடு, மொழி என இந்துத்துவாவை மோடி அரசு திணிக்கிறது. 100 நாள் வேலைத் திட்டம், தகவல் பெறும் உரிமை சட்டம், உணவு பாதுகாப்பு சட்டம் உள்ளிட்டவற்றை நிறைவேற்ற முடியாது என பா.ஜ.க. சொன்ன அனைத்தையும் நிறைவேற்றி காட்டினோம். அதேபோல, வறுமை கோட்டிற்கு கீழ் 5 கோடி குடும்பங்களுக்கு மாதம் 6 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவோம்.
எழுபதுக்கும், இருபதுக்கும் வித்தியாசம் தெரியாத பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராசனுக்கு கணக்கு பாடம் சொல்லி தர முடியுமா..?. காங்கிரஸ் கட்சி பெரிய கட்சி என்பதால் திட்டங்களை செயல்படுத்துவோம் என்ற நம்பிக்கையில் பெரிய திட்டங்களை அறிவிக்கிறது. ஜி.எஸ்.டி. வரி விதிப்பு நல்ல பூமாலை தான். ஆனால், பா.ஜ.க.வினால் குரங்கு கையில் பூமாலையாக மாறிவிட்டது. இந்த வரி முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டு, ஒரே வரி, மிதமான வரி, எளிமையான வரி என 2.0 என கொண்டு வருவோம். இன்றைய அ.தி.மு.க.விற்கும், எம்.ஜி.ஆரு.க்கும், ஜெயலலிதாவிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. மோடி என்ற சூத்திரதாரி நூலை ஆட்டினால் ஆடும் கைப்பாவை அ.தி.மு.க. அரசு. இந்த அரசு, பா.ஜ.க. நடத்தும் பாவைக்கூத்து. அ.தி.மு.க. அரசை அரசு என சொல்ல வெட்கப்படுகிறேன். மத்தியில் மாற்று அரசு அமைந்தால், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும். ராகுல்காந்தி பிரதமரானால் மறுநாளே ஸ்டாலின் முதலமைச்சராவார்.

நீட் தேர்வு ரத்து என காங்கிரஸ் சொன்ன அதேநாளில், நீட் தேர்வு தொடரும், அதை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளும் என பா.ஜ.க. அமைச்சர் பியூஸ் கோயல் சொன்னார். ராகுல்காந்தி தமிழர்களின் உணர்வு புரிந்து நீட் ரத்து செய்யப்படுமென கூறிய நிலையில், தமிழர்களின் உணர்வை துச்சமாக மதித்து பியூஸ் கோயல் பேசியிருக்கிறார். ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்.க்கு சுயமரியாதை இருந்தால், பியூஸ் கோயல் கருத்தை ஏற்க முடியாது என கண்டிக்கிறோம் என சொல்லிருக்க வேண்டும். ஆனால், மோடியை மீறி இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். ஜோடி இம்மியளவும் செயல்பட முடியாது. பா.ஜ.க., அ.தி.மு.க.வை உருட்டி, மிரட்டி, அடக்கி வைத்துள்ளது. இந்தியா என்ற கூட்டாச்சி முறையில் மத்திய, மாநில அரசுகள் நெருக்கமாக இருந்தால் தான் புரட்சிகரமான திட்டங்களை செயல்படுத்த முடியும். பகை அரசுகளால் நிறைவேற்ற முடியாது. மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட இடைத்தேர்தலில் தி.மு.க.விற்கு வாக்களிக்க வேண்டும்.
தமிழ்நாட்டிற்கும், தமிழர்களுக்கும் மிகப்பெரிய கெட்ட பெயரை ஏற்படுத்திய அரசு இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். அரசு. இதுபோல, கேலிக்கூத்தான, கைப்பாவையான அரசு இருந்தது இல்லை. அ.தி.மு.க. அரசிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், என தெரிவித்தார்.