கோவை : பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான திருநாவுக்கரசு, சபரிராஜன் ஆகியோர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரிய மனுவுக்கு தமிழக உள்துறைச் செயலாளர், கோவை மாவட்ட ஆட்சியர் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை : பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான திருநாவுக்கரசு, சபரிராஜன் ஆகியோர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரிய மனுவுக்கு தமிழக உள்துறைச் செயலாளர், கோவை மாவட்ட ஆட்சியர் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ் மற்றும் வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அரசியல் கட்சி பிரமுகர்களுக்கும் தொடர்பு இருப்பதால், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணை செய்து வருகிறது.

இதனிடையே, பொள்ளாச்சியில் பெண்கள் பாலியல் துன்புறுத்தல் வழக்கின் குற்றவாளிகள் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ் மற்றும் வசந்தகுமார் ஆகிய நால்வரும் கடந்த்ஃ மாதம் 10-ம் தேதி சென்னையில் உள்ள அறிவுரை கழகத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, கைதான நால்வரின் குண்டர் சட்டத்தை அறிவுரை கழகம் உறுதி செய்துள்ளது. இதையடுத்து, அவர்கள் மீண்டும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான திருநாவுக்கரசு, சபரிராஜன் ஆகியோர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி இருவரின் தாயாரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். மேலும், அந்த மனுவில், பாலியல் வன்கொடுமை வழக்கை உரிய சட்டத்தின் கீழ் தான் விசாரிக்க வேண்டும். குண்டர் சட்ட உத்தரவு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை. குண்டர் சட்ட உத்தரவு குடும்பத்தினருக்கு முறையாக தெரிவிக்கப்படவில்லை. மேலும், குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீதான குண்டர் தடுப்பு சட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விடுவிக்க உத்தரவிட வேண்டும், என கோரப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இது தொடர்பாக தமிழக உள்துறை செயலாளர், கோவை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் 4 வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் முதல் வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.