கோவை : எனது கணவரின் மரண விவகாரத்தைக் கைவிடக் கோரி டி.எஸ்.பி மூலம் சிலர் தங்களுடன் பண பேரம் பேசுவதாக உயிரிழந்த காசாளரின் மனைவி பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.
கோவை : எனது கணவரின் மரண விவகாரத்தைக் கைவிடக் கோரி டி.எஸ்.பி மூலம் சிலர் தங்களுடன் பண பேரம் பேசுவதாக உயிரிழந்த காசாளரின் மனைவி பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.
கடந்த 3-ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்த மார்ட்டின் நிறுவனத்தின் காசாளர் பழனிச்சாமியின் மரணம் தொடர்பான சம்பவத்தில் நீதி விசாரணை வேண்டும் என வலியுறுத்தி ஊர்வலமாக வந்து மேற்கு மண்டல ஐ.ஜி. பெரியய்யாவிடம் உறவினர்கள் மனு அளித்தனர்.
இதைத் தொடர்ந்து, உயிரிழந்த காசாளர் பழனிச்சாமியின் மனைவி சாந்தாமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது :- மார்ட்டின் குழுவில் உள்ள அனைவரின் மீதும் எங்களுக்கு சந்தேகம் உள்ளது. மார்ட்டின் நிறுவனத்தில் பணிபுரிந்த குறிப்பிட்ட நபர்களை கைது செய்ய வேண்டும். மார்ட்டின் மற்றும் அவரது மனைவியைக் கைது செய்ய வேண்டும்.
வருமான வரித்துறையினர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என் கணவரின் மரணத்திற்கு நீதி வேண்டும்.
மேலும், மணி என்கிற டி.எஸ்.பி. எங்களின் ஆதரவாளருக்கு பணம் தருவதாகப் பேசி வருகிறார். அதேபோல, மிரட்டல் விடுக்கிறார். இது தொடர்பாக நாங்கள் புகார் அளித்தும் சம்பந்தப்பட்ட டி.எஸ்.பி. மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க ஐ.ஜி.யிடம் வலியுறுத்தியுள்ளோம். என் கணவரை வருமான வரித்துறை அதிகாரிகள் அடித்து சித்திரவதை படுத்தியுள்ளனர். எனவே, வருமான வரித்துறை அதிகாரிகளையும் கைது செய்ய வேண்டும்.
மேலும், மார்ட்டின் நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் ஏற்கனவே, என் கணவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததுடன், உன் குடும்பத்தை கடைசியாக பார்த்துவிட்டு வருமாறும் எச்சரித்திருந்தனர், இவ்வாறு அவர் கூறினார்.
இதனிடையே, காசாளரின் மனைவி சாந்தாமணி செய்தியாளர்களைச் சந்தித்து வரும் போது, அவருடன் வந்தவர்களில் ஒருசிலர் பத்திரிக்கையாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.