கோவை : கோவை மாவட்டத்தில் நடைபெற்று வரும் நீட் தேர்வில் 15,960 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.
கோவை : கோவை மாவட்டத்தில் நடைபெற்று வரும் நீட் தேர்வில் 15,960 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.
மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவு தேர்வு நாடு முழுவதும் இன்று நடக்கிறது. தமிழகத்தில் சென்னை, கோவை உள்பட 14 மாவட்டங்களில் நீட் நுழைவு தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தை பொறுத்தவரை மாநகர பகுதியில் 21 மையங்களும், புறநகர் பகுதியில் 11 மையங்களும் என மொத்தம் 32 மையங்களில் தேர்வு நடக்கிறது. கோவை மாவட்டத்தில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கும்பகோணம், நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் தமிழக எல்லையோரம் அமைந்துள்ள கேரள மாணவர்கள் என 15 ஆயிரத்து 960 மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுதுகிறார்கள். இதில், மாநகர் பகுதியில் 10,200 மாணவர்களும், புறநகர் பகுதியில் 5,760 மாணவர்களும் தேர்வு எழுதுகிறார்கள். தேர்வுகள் அனைத்தும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளிலேயே நடத்தப்படுகிறது. தேர்வு தொடர்பாக சென்னை மண்டல சி.பி.எஸ்.இ. அதிகாரிகளின் தலைமையின்கீழ் தேர்வு மையங்கள், கண்காணிப்பாளர்கள், பறக்கும் படை அலுவலர்கள், போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள், வழித்தட அலுவலர்கள், மின்சாரம், குடிநீர் வசதிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

தேர்வு எழுத வரும் மாணவர்கள் 12 மணிக்கு மேல் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். 1.30 மணிக்கு மேல் வரும் மாணவர்களுக்கு அனுமதி கிடையாது. தேர்வெழுத வரும் மாணவர்கள் முழுவதுமாக சோதனை நடத்திய பிறகே தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். மாணவர்கள் ஹால் டிக்கெட், பாஸ்போர்ட் புகைப்படம், தபால் அட்டை அளவிலான புகைப்படம் ஆகியவற்றை கட்டாயம் எடுத்து வர வேண்டும். கடந்த ஆண்டு போலவே, மாணவிகள் கம்மல், ஜிமிக்கி, வளையல் உள்ளிட்ட ஆபரணங்கள், முழுக்கை சட்டை, விதவிதமான சுடிதார், எம்ராய்டரி வைத்த ஆடைகள் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், சர்க்கரை நோய் உள்ள மாணவர்களுக்கு மட்டும் மாத்திரைகள், பழங்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.