கோவை : தொழிலதிபர் மார்டினுக்கு சொந்தமான நிறுவனத்தில் 25 வருடமாக வேலை செய்து வந்த ஊழியர் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் வருமானவரித் துறை அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை : தொழிலதிபர் மார்டினுக்கு சொந்தமான நிறுவனத்தில் 25 வருடமாக வேலை செய்து வந்த ஊழியர் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் வருமானவரித் துறை அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 30-ம் தேதி முதல் மே 2-ம் தேதி வரை நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள லாட்டரி அதிபர் மார்டினுக்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் அலுவலங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக, கோவை ஜி.என். மில்ஸ் பகுதியில் உள்ள மார்ட்டின் நிறுவனத்திலும் சோதனை நடத்தப்பட்டது. இதில், 25 ஆண்டுகளாக காசாளராக பணியாற்றி வந்த பழனிச்சாமியிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
இதையடுத்து, வருமான வரித்துறையின் விசாரணைக்கு பிறகு பழனிச்சாமி விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில், மேட்டுப்பாளையம் அருகே உள்ள வெள்ளியங்காடு குட்டையில் நேற்று சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இது குறித்து தகவலறிந்து சென்ற போலீசார் சடலத்தை மீட்டு, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, தனது தந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பழனிச்சாமியின் மகன் ரோகின் குமார் தெரிவித்திருந்தார்.
இதனிடையே, வருமானவரி துறையினர் நடத்திய தொடர் விசாரணையின் காரணமாக எனது தந்தை மன அழுத்தத்தினால் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என பழனிச்சாமியின் மகன் ரோகின்குமார் குமார் காவல்துறையினரிடம் புகார் அளித்தார்.அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் காரமடை போலீசார், மர்மமான முறையில் மரணம் (174 சி.ஆர்.பி.சி) மற்றும் தற்கொலைக்கு தூண்டுதல் (306 ஐ.பி.சி) ஆகிய பிரிவுகளின் கீழ் வருமானவரி துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும், தனது தந்தையின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் நீதிமன்றத்தில் இதனை அவசர வழக்காக எடுக்க வேண்டும் என தலைமை குற்றவியல் நடுவர் மன்றத்தில் பழனிச்சாமியின் மகன் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், தனது தந்தையின் மரணத்தில் சந்தேகம் எழுந்துள்ளதால், கோவை மருத்துவமனையில் உடற்கூறு பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்றும், அதை வீடியோ பதிவு செய்யவேண்டும் என்றும் குற்றவியல் நடுவர் மன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளார்.