கோவை : லாட்டரி அதிபர் மார்ட்டின் காசாளர் உயிரிழந்த சம்பவத்தை கொலை வழக்காகப் பதிவு செய்ய வலியுறுத்தி உறவினர்கள் காவல்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவை : லாட்டரி அதிபர் மார்ட்டின் காசாளர் உயிரிழந்த சம்பவத்தை கொலை வழக்காகப் பதிவு செய்ய வலியுறுத்தி உறவினர்கள் காவல்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான கோவை ஹோமியோபதி அலுவலகத்தில் காசாளராக பணிபுரிந்து வந்த பழனிச்சாமி என்பவர் நேற்று மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை வெள்ளியங்காடு குளத்தில் சடலமாக மீட்கப்ப்பட்டார். ஏற்கனவே, கடந்த மூன்று நாட்களாக நாடு முழுவதும் மார்ட்டினுக்கு சொந்தமான அனைத்து அலுவலகங்கள் வீடுகளில் தொடர்ந்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய போது, பழனிச்சாமியிடமும் அவரது வீடு உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடத்தபட்டது. இந்த நிலையில், நேற்று பழனிச்சாமி சடலமாக மீட்கப்பட்டு, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அவரது உடல் வைக்கபட்டுள்ளது.

இதனிடையே, பழனிச்சாமி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாகவும், அவருக்கு பல தரப்புகளில் இருந்தும் நெருக்கடி வந்துள்ளதாக குற்றம்சாட்டிய அவரது மகன் ரோகின் மற்றும் உறவினர்கள், காசாளர் பழனிச்சாமி உயிரிழந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்ய வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், இன்று பழனிச்சாமியின் உடலை கோவைக்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனை செய்ய போலீசார் முயற்சி மேற்கொண்டனர். இதனால், ஆத்திரமடைந்த உறவினர்கள் கொலை வழக்காகப் பதிவு செய்த பின்னர் தான், பிரேத பரிசோதனை செய்ய வலியுறுத்தி காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், இந்த சம்பவத்தை செல்போனில் பதிவு செய்து கொண்டிருந்த கியூ பிரிவு காவல்துறை அதிகாரி ஒருவரின் செல்போன் உடைக்கபட்டதால் பதற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.