கோவை : லாட்டரி அதிபர் மார்ட்டினின் நிறுவனங்களில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்திய நிலையில், அதிகாரிகளின் விசாரணையில் இருந்து இன்று விடுவிக்கப்பட்ட காசாளர் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை : லாட்டரி அதிபர் மார்ட்டினின் நிறுவனங்களில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்திய நிலையில், அதிகாரிகளின் விசாரணையில் இருந்து இன்று விடுவிக்கப்பட்ட காசாளர் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துடியலூர் அருகே உள்ள வடமதுரை பகுதியில் வசித்து வருபவர் பழனி (42). இவர் மார்ட்டினின் ஹோமியோபதி கல்லூரியில் காசாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 30ஆம் தேதி தமிழகம் முழுவதும் மார்ட்டினுக்கு சொந்தமான நிறுவனங்கள், வீடுகள், ரிசார்ட்டுகள் என பல இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதில், கோவை மாவட்டத்தில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனைகள் நடைபெற்றது.
அதேபோல, மார்ட்டின் நிறுவனங்களில் பணிபுரியும் நிர்வாகத்தினருடன் தொடர்புடைய முக்கிய நபர்களிடமும் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில், குறிப்பாக கவுண்டம்பாளையம் அருகே உள்ள ஹோமியோபதி கல்லூரியில் பல்வேறு தரப்பினரிடம் வருமானவரித்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில், காசாளர் பழனியை தொடர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இன்று பழனியை விசாரணைகள் முடிந்து வருமான வரித்துறையினர் விடுவித்தனர்.
இந்த நிலையில், இன்று காரமடை காவல் எல்லைக்குட்பட்ட வெள்ளியங்காடு அருகே உள்ள குட்டையில் காசாளர் பழனி பிணமாக கண்டெடுக்கப்பட்டார். வருமான வரித்துறையினர் சோதனையில் இருந்து இன்று விடுவிக்கப்பட்ட நிலையில், காசாளர் பழனி பிணமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பழனியின் மரணம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.