கோவை : ஆனைகட்டி மலைப்பகுதியில் சாலையை கடக்கும் காட்டு யானைகளுடன் செல்ஃபி எடுப்பது, கூச்சலிட்டு விரட்டுவது போன்ற தகாத செயல்களினால் ஈடுபடும் வாகன ஓட்டிகள் மற்றும் உள்ளூர் மக்கள் ஆபத்தை உருவாக்கிக் கொள்ளும் சம்பவம் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.
கோவை : ஆனைகட்டி மலைப்பகுதியில் சாலையை கடக்கும் காட்டு யானைகளுடன் செல்ஃபி எடுப்பது, கூச்சலிட்டு விரட்டுவது போன்ற தகாத செயல்களினால் ஈடுபடும் வாகன ஓட்டிகள் மற்றும் உள்ளூர் மக்கள் ஆபத்தை உருவாக்கிக் கொள்ளும் சம்பவம் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள காட்டு யானைகள் கடந்து செல்லும் முக்கியப் பகுதியாக ஆனைக்கட்டி மலைப்பகுதி உள்ளது. இங்கு நாள்தோறும் யானைகள் சாலையை கடந்து பிற பகுதிகளுக்குச் செல்வதும், அங்குள்ள நீர்நிலைகள் மற்றும் செங்கல் சூளைகளின் நீர்தொட்டிகளில் தண்ணீரை அருந்தச் செல்வதும் வழக்கம்.
இந்த நிலையில், ஆனைகட்டி அருகே கடந்த புதன்கிழமை மாலை 6 மணிக்கு காட்டு யானைகள் கூட்டமாக, சாலையைக் கடந்து எதிரே உள்ள செங்கல் சூலையின் தண்ணீர் தொட்டியில் நீர் அருந்துவதற்காக நின்று கொண்டிருந்தது. ஆனால், சாலையைக் கடக்க முடியாதவாறு, வாகனங்களை யானைகளின் முன்பு நிறுத்தி விட்டனர். அப்போது, அங்கிருந்த சிலர், யானைகள் சாலையைக் கடப்பதற்கு வழி விடுங்கள் எனக் கூச்சலிட்டார். ஆனால், இதனைப் பொருட்படுத்தாத அந்த 4 சக்கர வாகனத்தில் வந்தவர்களில் ஒருவர், கீழே இறங்கி செல்ஃபி எடுத்தார்.
"வாகனத்தில் வந்தவர்களில் ஒருவர் ஒழுங்கீனமற்ற முறையில் செல்ஃபி மற்றும் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார். கூட்டத்தில் இருந்த சிலர் ஆத்திரமடைந்த யானை பின்புறம் இருப்பதாக கூச்சலிட்டும், அந்த நபர் நகரவில்லை," என்கின்றனர் அங்கிருந்தவர்கள்.
விலங்குகள் அமைதியாக சாலையைக் கடப்பதற்காக இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை அப்புறப்படுத்த முயற்சி செய்பவர்களுடன், யானைகளை தொந்தரவு செய்பவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.
"இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவது வருத்தமளிக்கிறது. ஒருசிலர் குடிபோதையில், என்ன செய்கிறோம் என்பதை அறியாமல் வனவிலங்குகளை தொந்தரவு செய்யும் செயல்களில் ஈடுபடுகின்றனர். அதேபோல, காரில் வரும் சிலர், யானைகளின் முன்பு தங்களது வாகனங்களை நிறுத்தி, அவற்றிற்கு இடையூறை ஏற்படுத்துகின்றனர்," என்கின்றனர் பொதுமக்களில் சிலர்.
இது தொடர்பாக, சிலர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு அவர்கள் விரைந்து வந்தனர். ஆனால், யானைகளை சாலையை கடக்க முடியாமல் செய்த ஒருசில ஒழுங்கீனமற்ற நபர்களின் செயலால், யானைகள் தங்களது தாகத்தை தணிக்காமல், மீண்டும் வனப்பகுதிக்குள்ளே திரும்பிச் சென்றுவிட்டன.
"இது மாதிரியான பொறுப்பற்ற சில மனிதர்களால், வனவிலங்குகள் அவற்றின் குணத்தை மாற்றுவதற்கு காரணமாகிவிடுகின்றன. இது மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்கும். மனிதர்களால் தொந்தரவு செய்யப்படும் காட்டு யானைகள், அதன் பொறுமையை இழந்து பிற பகுதிகளில் தாக்குதல்களை நடத்துகின்றன," என்கின்றார் இந்த சம்பவங்களை நேரில் பார்த்த ஆர்வலர் ஒருவர்.
வனப்பகுதிகளில் தற்போது வறட்சி நிலவி வருவதால், காடுகளை விட்டு வெளியே வரும் யானைகள் இதுபோன்று கிடைக்கும் நீர் தொட்டிகளில் நீரைப் பருக அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்படுகிறது. மேலும், இது போன்ற ஒழுங்கீனமற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ,
"வனவிலங்குகளை அச்சுறுத்துவது பற்றி பொதுமக்கள் சீக்கிரம் புகார் அளித்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்க ஏதுவாக இருக்கும்," என்றார் கோவை மாவட்ட வன அதிகாரி டி. வெங்கடேஷ்.