மதுரை : இலங்கை குண்டுவெடிப்பிற்கும் மதுரை ஆட்சியருக்கும் தொடர்பிருப்பதாகக் கூறியவரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், அவர் காவல்நிலையத்தில் ஆடைகளின்றி நிற்கும் காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை : இலங்கை குண்டுவெடிப்பிற்கும் மதுரை ஆட்சியருக்கும் தொடர்பிருப்பதாகக் கூறியவரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், அவர் காவல்நிலையத்தில் ஆடைகளின்றி நிற்கும் காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வழக்கறிஞர் மற்றும் சமூக ஆர்வலர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட சி.எம். சாமி என்பவர் தனது முகநூலில், இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பிற்கும், மதுரை மாவட்ட ஆட்சியருக்கும் தொடர்பு உள்ளது என தெரிவித்திருந்தார். மேலும், மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தீவிரவாதிகளை இலங்கைக்கு அனுப்பி உள்ளார் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
மாவட்ட ஆட்சியர் கோடிக்கணக்கான பணத்தை வாங்கிக் கொண்டு சமூக நலனுக்கு எதிராக செயல்படுவதாகவும், இதன் ஆதாரங்கள் அனைத்தும் என்னிடம் உள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார். மேலும், அவர் அடுத்தகட்டமாக தமிழகத்தை தீவிரவாதிகள் தாக்க உள்ளதாகவும், இந்த விவரம் தொடர்பான ஆவணங்களை நேர்மையான அதிகாரிகள் மற்றும் நீதிபதிகள் முன்பு ஒப்படைப்பேன் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கறிஞர் சி.எம். சாமி மீது வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், இன்று அவர் காவல்நிலையத்தில் ஆடைகளின்றி, கைகளில் வழக்கறிஞர் ஆடையை வைத்தபடி காவலர்களுடன் வாக்குவாதம் செய்யும் காட்சிகள் வெளியாகி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, போலீசார் சி.எம். சாமியின் நடவடிக்கைகள் குறித்தும், இவர் மனநிலை பாதிக்கப்பட்டவரா..? என்பது குறித்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.