கோவை : பொள்ளாச்சி அருகே போலி பெண் மருத்துவர் அளித்த கருக்கலைப்பு சிகிச்சையால், கர்ப்பிணி பெண் உயிரிழந்த நிலையில், சம்பந்தப்பட்ட ஆயுர்வேத மருத்துவமனைக்கு கோவை மாவட்ட நிர்வாக அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்தனர்.
கோவை : பொள்ளாச்சி அருகே போலி பெண் மருத்துவர் அளித்த கருக்கலைப்பு சிகிச்சையால், கர்ப்பிணி பெண் உயிரிழந்த நிலையில், சம்பந்தப்பட்ட ஆயுர்வேத மருத்துவமனைக்கு கோவை மாவட்ட நிர்வாக அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்தனர்.
கோவை மாவட்டம் நெகமத்தை அடுத்த மெட்டு வாவி அரிஜன காலனியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மனைவி வனிதாமணியின் (37) கர்ப்பத்தைக் கலைப்பதற்காக வடசித்தூரில் உள்ள ஆயுர்வேத மருத்துவர் முத்துலட்சிமியின் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது, வனிதாமணிக்கு அவர் கருக்கலைப்பு ஊசி போட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, வனிதாமணியின் உடல்நிலை மோசமாகி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து, வனிதாமணியின் மகன் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், முத்துலட்சுமி போலி மருத்துவர் என்பது தெரியவந்தது.
இந்த நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் கு. இராசமணியின் உத்தரவின் பேரில், மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குனர் பானுமதி தலைமையிலான அதிகாரிகள் கிருஷ்ணா, தனம் ஆகிய குழுவினர், முத்துலட்சுமியின் மருத்துவமனையில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, முத்துலட்சுமியின் மருத்துவ சான்றிதழ்களை ஆய்வு செய்தனர். இதைத் தொடர்ந்து, முத்துலட்சுமியின் மருத்துவமனைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இது குறித்து கோவை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பானுமதி கூறியதாவது :- நாங்கள் முத்துலட்சுமி குறித்து விசாரணைகளை நேரடியாக மேற்கொண்டுள்ளோம். இந்த போலி மருத்துவர் தொடர்பான உண்மைத் தன்மையை தெரிந்த பின்பு, அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம். அதேபோல, பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சுகாதாரத் துறையின் சார்பில் நாங்களும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளோம். தொடர் விசாரணையின் மூலம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வோம், என தெரிவித்தார்.