கோவை : பொள்ளாச்சி அருகே போலி பெண் மருத்துவர் கருக்கலைப்புக்கான சிகிச்சை அளித்ததில் கர்ப்பிணி பெண் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை : பொள்ளாச்சி அருகே போலி பெண் மருத்துவர் கருக்கலைப்புக்கான சிகிச்சை அளித்ததில் கர்ப்பிணி பெண் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் நெகமத்தை அடுத்த மெட்டு வாவி அரிஜன காலனியைச் சேர்ந்தவர் செல்வராஜ் மற்றும் வனிதாமணி (37) தம்பதியினர். இவர்களுக்கு 4 மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில், வனிதாமணி மீண்டும் கர்ப்பம் அடைந்ததால், கர்ப்பத்தை கலைக்க கணவன், மனைவி இரண்டு பேரும் முடிவு செய்தனர். இதையடுத்து, வடசித்தூரில் உள்ள ஆயுர்வேத மருத்துவர் முத்துலட்சுமியிடம் கருவை கலைக்க பேசியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, வனிதாமணி தனது கணவருடன் வடசித்தூரில் உள்ள முத்துலட்சுமியின் ஆயுர்வேத கிளினிக்குக்கு சென்றுள்ளார். அப்போது, வனிதாமணிக்கு அவர் கருக்கலைப்பு ஊசி போட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, வனிதாமணியின் உடல்நிலை மோசமானது. இதனால், அதிர்ச்சி அடைந்த முத்துலட்சுமி, வனிதாமணியை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து, செல்வராஜ் தனது மனைவியை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால், செல்லும் வழியிலேயே வனிதாமணி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் வனிதாமணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வனிதாமணி மகன் மாரிமுத்து கொடுத்த புகாரின் பேரில், முத்துலட்சுமி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், முத்துலட்சுமி குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர் போலி மருத்துவர் என்பது தெரியவந்துள்ளது. மேலும், கடந்த 2017 ஆம் ஆண்டு முத்துலட்சுமி போலி மருத்துவர் என்ற புகாரின் பேரில் சுகாதாரத்துறை இணை இயக்குனர் அவரது கிளினிக்கிற்கு திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மருத்துவ படிப்பிற்கான சான்றிதழ்கள் எதுவும் இல்லாமல், பொதுமக்களுக்கு மருந்து மாத்திரைகள் கொடுத்தும், ஊசி போட்டும் முத்துலட்சுமி மருத்துவ சிகிச்சை அளிப்பது தெரியவந்தது. இதையடுத்து, போலி மருத்துவரை கைது செய்ய சுகாதாரத்துறை இணை இயக்குனர் நெகமம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர், அவர் குறித்த தகவல்கள் வெளியில் வரவில்லை.
இந்தநிலையில், தற்போது போலி மருத்துவர் முத்துலட்சுமி மீண்டும் சிகிச்சைகள் அளித்து வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில், கர்ப்பிணி பெண் ஒருவர், அவர் அளித்த சிகிச்சையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, போலி மருத்துவர் என்ற புகாரில் இருக்கும் நபர் எப்படி மீண்டும் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தார் என்பது குறித்த கேள்விகள் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.