திருப்பூர் : பொன்பரப்பி சம்பவத்தில் வன்னியர் சமூகம் குறித்து நான் பேசாத ஒன்றை பேசியதாக ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருப்பது வருத்தத்திற்குரியது என்றும், நான் பேசியதை ராமதாஸ் முழுமையாக பார்க்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் : பொன்பரப்பி சம்பவத்தில் வன்னியர் சமூகம் குறித்து நான் பேசாத ஒன்றை பேசியதாக ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருப்பது வருத்தத்திற்குரியது என்றும், நான் பேசியதை ராமதாஸ் முழுமையாக பார்க்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது :- பொன்பரப்பி வன்முறையைக் கண்டித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், வன்னியர்கள் குறித்து நான் பேசாத ஒன்றை பேசியதாக சமூக வலைதளங்களில் பரவியதை நம்பி பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருப்பது வருத்தத்தை ஏற்படுத்துகிறது. நான் பேசிய முழுமையான வீடியோ யூடியூப்பில் முழுவதுமாக பகிரப்பட்டுள்ளது. அதனை அவர் முழுவதுமாக கேட்க வேண்டும்.
பாப்பிரெட்டிப்பட்டி, கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் 10 வாக்குச்சாவடிகளில் முறைகேடு நடைபெற்றுள்ளது. மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என தமிழக தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ள நிலையில், உடனடியாக அங்கு வாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டும். பொன்பரப்பியிலும் அதேபோல் மறுவாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டும். மேலும், நடந்து முடிந்த 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் நடக்கவுள்ள 4 சட்டமன்ற இடைத்தேர்தல் என 22 தொகுதிகளில் ஆளும் கட்சி தோல்வியடையும் என்று கருதி 3 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதிநீக்கம் செய்து ஆட்சியை தக்கவைக்க நினைப்பது ஜனநாயக விரோத செயல்.
தனது சொந்த கட்சிக்கும், ஆட்சிக்கும் எதிராக நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் வாக்களித்த ஓ.பி.எஸ். உட்பட 11 சட்டமன்ற உறுப்பினர்கள் மீது அ.தி.மு.க. கட்சியும், ஆட்சியும் நடவடிக்கை எடுக்காதது ஏன்..?. இந்த விஷயத்தில் சபாநாயகர் நடுநிலையோடு செயல்பட வேண்டும். மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதியளித்துள்ளதைத் திரும்ப பெறவேண்டும். அவை நிறைவேற்றப்பட்டால் தமிழகம் பாலைவனமாக்கப்படும், எனக் கூறினார்.

இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணை செயலாளர் சுப்பராயன் கூறுகையில், "பொன்பரப்பி சம்பவத்தில் முத்தரசன் பேசாத ஒன்றை பேசியதாக, சமூக வலைதளங்களில் சில விஷமிகள் பரப்பியதை நம்பி பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அது வதந்தியே, அன்றைய தினம் முத்தரசன் பேசியதை யூடியூபில் முழுவதுமாக பகிர்ந்துள்ளோம். அதனை அவர் முழுவதுமாக பார்க்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கேட்டுக்கொள்கிறது அப்படி ஏதேனும் வன்னியர்கள் குறித்து தவறாகப் பேசியிருந்தால், அதற்கான முழு பொறுப்பையும் கட்சி ஏற்றுக்கொள்ளும்," என்றார்.