கோவை : கனடா உள்ளிட்ட வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாகக் கூறி லட்சக்கணக்கான ரூபாயை மோசடி செய்துள்ள 'கிறிஸ்லின் எ.டி.யு. கன்சல்டன்சி' என்ற நிறுவனம் மீது பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர்.
கோவை : கனடா உள்ளிட்ட வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாகக் கூறி லட்சக்கணக்கான ரூபாயை மோசடி செய்துள்ள 'கிறிஸ்லின் எ.டி.யு. கன்சல்டன்சி' என்ற நிறுவனம் மீது பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் கடந்த சில வருடங்களாக வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாகக் கூறி பண மோசடிகள் செய்யும் கும்பல்கள் அதிகரித்து வருகிறது. இவர்கள், குறிப்பாக இளைஞர்களை குறிவைத்து கொள்ளை லாபம் சம்பாதித்து வருகின்றனர். மேலும், இந்த கும்பல்கள் கோவை மாவட்டத்தை தலைமையிடமாக வைத்து, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டத்தில் உள்ள இளைஞர்களை ஏமாற்றி பணம் சம்பாதித்து வருகின்றனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்தாலும், காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதில்லை. இப்படியிருக்க நேற்று 30-க்கும் மேற்பட்டோர் கோவை மாநகர காவல் ஆணையாளரிடம் மோசடி நபர்களை கைது செய்ய வலியுறுத்தி புகார் அளித்தனர். இந்த நிலையில், மீண்டும் இன்று 15-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேறொரு நிறுவனத்தின் மீது கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர்.

கோவை காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் 'கிரிஸ்லின் எ.டி.யு. கன்சல்டன்சி' என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் நிறுவனர்களான ரசூல் பீட்டர் அவரது மகள் இவாஞ்சலின் ஆகியோர் ஆங்கிலம் கற்பிக்கும் சிறப்பு பயிற்சி வகுப்பு மூலம் வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாக இளைஞர்களை மூளைச் சலவை செய்தனர். மேலும், இவர்களுடன் தேவ் ஆனந்த் என்பவரும் இணைந்து கனடாவில் வேலை வாங்கித் தருவதாகவும், லட்சக்கணக்கான ரூபாய் சம்பளம் பெற்று தருவதாகவும் இளைஞர்களிடம் ஆசைவார்த்தை கூறியுள்ளனர். இதில், ஏமாற்றம் அடைந்த பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் தவணைகளாக 2 லட்சம் முதல் 4 லட்சம் வரை பணத்தை செலுத்தியுள்ளனர். இப்படி 15-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் 40 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக இவர்களிடம் கொடுத்துள்ளனர்.

பின்னர், பணம் கட்டி நான்கு மாதங்களுக்கு மேல் ஆகியும் எந்த பதிலும் வராததால், சம்பந்தப்பட்டவர்களிடம் பணத்தை திருப்பித் தரும்படி கேட்டால், அவர்கள் பணத்தை திருப்பித் தர மறுத்துவிட்டனர். இதையடுத்து, ஜனவரி மாதம் 29-ம் தேதி சி-1 காவல் நிலையத்திலும், அதைத் தொடர்ந்து பிப்ரவரி மாதம் சி-2 காவல் நிலையத்திலும் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். மேலும், லட்சக்கணக்கான பணம் ஏமாற்றப்பட்டதால், காவல் நிலையங்களில் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்கும்படி தெரிவித்துள்ளனர். இதையடுத்து, பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். ஆனால், பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ச்சியான புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், பணத்தை பெற்றுக்கொண்ட மோசடியாளர்கள் தலைமறைவாகி விட்டனர்.
இந்த நிலையில், இன்று 15-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் எங்களின் நியாயமான பணத்தை மீட்டுத்தருவதுடன், மோசடியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோவை மாநகர காவல் ஆணையாளரிடம் புகார் அளித்தனர். அப்போது, காவல் ஆணையாளர் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.