கோவை : ‘ஃபனி’ புயலால் கோவை மாவட்டத்திற்கு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் மிகவும் குறைவு என கோவை வேளாண் பல்கலைக்கழக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோவை : ‘ஃபனி’ புயலால் கோவை மாவட்டத்திற்கு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் மிகவும் குறைவு என கோவை வேளாண் பல்கலைக்கழக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. அடுத்த 36 மணி நேரத்தில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று 'ஃபனி' புயலாக மாறி வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து, வரும் 30-ம் தேதி கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், தமிழத்தின் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் 'ஃபனி' புயலின் தாக்கம் குறித்து கோவை வேளாண் பல்கலைக்கழக வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் பேராசிரியர் ராமநாதன் கூறியதாவது :- ‘ஃபனி’ புயலால் கோவை மாவட்டத்திற்கு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு மிகவும் குறைவு. ஆனால், தற்போது பெய்து வரும் மழையின் அளவு சற்று அதிகரிக்க கூடும். மேலும், கோவை மாவட்டத்தில் மார்ச், ஏப்ரல், மே ஆகிய மூன்று மாதங்களில் சராசரியாக 137 மி.மீ அளவிற்கு மழை பொழிவு இருக்கும். ஆனால், இந்த ஆண்டு மார்ச் மாதம் பெய்ய வேண்டிய 18.2 மி.மீ அளவிலான மழை பெய்யவில்லை. ஏப்ரல் மாதத்தில், கடந்த 4 நாட்களாக பெய்த மழையால் 23.6 மி.மீ அளவிற்கு மழை பதிவாகியுள்ளது. குறிப்பாக, 23 ஆம் தேதியன்று மட்டுமே 19.4 மி.மீ அளவிற்கு மழை பெய்தது. அடுத்த இரண்டு அல்லது மூன்று தினங்களில் 10 மி.மீ அளவிற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது.
'ஃபனி' புயலால் மழையின் அளவு சற்று அதிகரிக்ககூடும். மே மாதத்தில் 50 மி.மீ அளவிற்கு மழை எதிர்பார்க்கப்படுகிறது. சென்ற ஆண்டு அக்னி நட்சத்திரத்தின் வெப்பத்தை உணர முடியாத அளவுக்கு மழைப்பொழிவு இருந்தது. இந்த ஆண்டு மழைப்பொழிவு இல்லாததால், அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் சராசரியாகவே இருக்கும். மே 4 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை அக்னி நட்சத்திர வெயில் இருக்கும், என அவர்தெரிவித்தார்.