கோவை : பன்னிமடை அருகே பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ. 3 லட்சம் நிதியுதவி அளித்துள்ளது.
கோவை : பன்னிமடை அருகே பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ. 3 லட்சம் நிதியுதவி அளித்துள்ளது.
கோவை மாவட்டம் பன்னிமடை பகுதியில் கடந்த மாதம் 25-ம் தேதி 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டதில், சந்தோஷ் குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும், சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்ய வாய்ப்பிருப்பதாக எழுந்த சந்தேகத்தின் பேரில், மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அரசியல் தலைவர்களும், பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்ததுடன், குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால், இந்த சம்பவத்தில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் மவுனம் காத்து வந்தனர்.
இந்த நிலையில், பன்னிமடை கிராமத்தைச் சேர்ந்த சிறுமியின் குடும்பத்திற்கு ரூ. 3 லட்சம் நிதியுதவியை முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்வதாகக் கூறிய அவர், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவனுக்கு உரிய தண்டனை வழங்கப்படும் என்றும் கூறினார்.