கோவை : கோவை மற்றும் பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதிகளில் தேர்தல் அமைதியாக நடைபெறுவதற்கு ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றியை கோவை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி தெரிவித்தார்.
கோவை : கோவை மற்றும் பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதிகளில் தேர்தல் அமைதியாக நடைபெறுவதற்கு ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றியை கோவை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- கோவை மற்றும் பொள்ளாச்சி பாராளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் மிக நல்ல முறையில், அமைதியாக, சட்ட ஒழுங்கு பிரச்சினைகள் ஏதுமின்றி நடந்து முடிந்துள்ளது. இதற்கு முழுமையாக ஒத்துழைப்பு அளித்த அரசியல் கட்சிகளுக்கும், வேட்பாளர்களுக்கும் பாராட்டுக்ளையும், நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறேன். விரிவான தேர்தல் ஏற்பாடுகள் செய்து, நன்னடத்தை விதிகள் சரியான முறையில் அனைவரும் கடைப்பிடிப்பதை உறுதி செய்த பறக்கும் படை அலுவலர்கள், தேர்தல் நல்ல முறையில் நடைபெற சிறந்த முறையில் பணி மேற்கொண்ட வாக்கு சாவடி அலுவலர்கள், பணியாளர்கள், காவலர்களுக்கும் 100 விழுக்காடு வாக்களித்திட வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் வேண்டுகோளை மக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரமாக வெகுவாக எடுத்துச் சென்ற சமூக அமைப்புகள், மாவட்டத்திலுள்ள அனைத்து அரசுத் துறைகள், தனியார் மற்றும் அரசுப் பள்ளிகள், கல்லூரிகள், பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், சமூக அமைப்புகள் அனைவருக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், மாற்றுத் திறனாளி வாக்காளர்கள், எளிதாக வாக்குச்சாவடிக்கு வருகை தந்து சிரமமின்றி வாக்களித்திட ஒத்துழைப்பு அளித்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி அலுவலர்கள், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனங்கள், அமைப்புகளுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
கோவை மற்றும் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிகளுக்குட்பட்ட சட்டமன்ற தொகுதி வாரியான உதவித் தேர்தல் அலுவலர்களுக்கும், வட்டாட்சியர்களுக்கும், அவர்களின் சிறப்பான பணிக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தல் காலத்தில் சட்ட ஒழுங்கினை சிறப்புக் கவனம் செலுத்தி வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களித்திட சிறப்பாக நடவடிக்கைகள் மேற்கொண்ட மாநகரக் காவல் ஆணையர், துணை ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் துறையின் அனைத்து நிலை அலுவலர்கள் மற்றும் காவலர்களுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மற்றும் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்ட மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் மற்றும் பணியாளர்களுக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தல் தொடர்பான அனைத்து விபரங்களையும், பொதுமக்களுக்கு முறையாக தெரிவித்திட, அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு அளித்து செய்திகளைக் கொண்டு சென்றதுடன், தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள், தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் மற்றும் வாக்களித்தல் வரை அனைத்து விவரங்கள் தொடர்பாக, ஆக்கப்பூர்வமாக பணியாற்றி, தேர்தல் நல்ல முறையில், அமைதியாக, நியாயமாக நடைபெறுவதற்கு மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளித்த அனைத்து ஊடகங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள், செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்களுக்கும் எனது பாராட்டுக்களையும், நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.