கோவை : மக்களவை தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள 13 ஆவணங்களில் ஒன்றை காண்பித்து வாக்குப்பதிவு செய்யலாம் எனவும், கோவை மாவட்டத்தில் சிறப்பு முகாம்கள் மூலம் 43 ஆயிரத்து 153 வாக்காளர்கள் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கோவை மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை : மக்களவை தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள 13 ஆவணங்களில் ஒன்றை காண்பித்து வாக்குப்பதிவு செய்யலாம் எனவும், கோவை மாவட்டத்தில் சிறப்பு முகாம்கள் மூலம் 43 ஆயிரத்து 153 வாக்காளர்கள் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கோவை மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 18 -ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஆயத்த பணிகளில் தேர்தல் பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். கோவை மாவட்டத்தில் கோவை, பொள்ளாச்சி ஆகிய இரு மக்களவை தொகுதிகள் உள்ளன. கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் 975 மையங்களில் 3,070 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.
கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் 14 லட்சத்து 38 ஆயிரத்து 442 ஆண் வாக்காளர்களும், 14 லட்சத்து 66 ஆயிரத்து 331 பெண் வாக்காளர்களும், 341 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 29 லட்சத்து 05 ஆயிரத்து 114 வாக்காளர்கள் உள்ளனர். இதில், கடந்த மாதம் நடைபெற்ற சிறப்பு முகாம்கள் மூலம் 43 ஆயிரத்து 153 வாக்காளர்கள் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, புதியதாக சேர்க்கப்பட்டுள்ள 43 ஆயிரத்து 153 வாக்காளர்களையும் சேர்த்து சுமார் 69 ஆயிரம் வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை விநியோகிக்கப்பட்டு வருகின்றன. வாக்காளர் அடையாள அட்டை கிடைக்க பெறாதவர்கள் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள 13 ஆவணங்களை காண்பித்து வாக்களிக்கலாம் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கோவை மாவட்டத்தில் 69 ஆயிரம் வாக்காளர்களுக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை விநியோகிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், எத்தனை வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன என்கிற விபரம் இல்லை. வாக்காளர் அடையாள அட்டை கிடைக்க பெறாதவர்கள் தங்களுக்கு கிடைக்க பெற்றுள்ள பூத்சிலிப்புடன் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள ஆதார் அட்டை, கடவுச்சீட்டு, பான்கார்டு, ஒட்டுநர் உரிமம், வங்கி மற்றும் தபால் அலுவலகங்கள் சார்பில் வழங்கப்பட்டுள்ள கணக்கு புத்தகங்கள் உள்ளிட்ட 13 ஆவணங்களை காண்பித்து வாக்களிக்கலாம்,’’ என்றார்.