கோவை : கோவை நாடாளுமன்ற தேர்தல் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் ஆர். மகேந்திரனை ஆதரித்து கோவை சரளா இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
கோவை : கோவை நாடாளுமன்ற தேர்தல் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் ஆர். மகேந்திரனை ஆதரித்து கோவை சரளா இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கான இறுதிகட்ட பிரச்சாரத்தில் அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், கோவையில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் ஆர். மகேந்திரனை ஆதரித்து கோவை சரளா இன்று மாலை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, அண்மையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நிகழ்ந்த குற்றங்களை சுட்டிக்காட்டிய அவர், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் வெற்றி பெற்றால், பெண்கள் மற்றும் குழந்தைகள் அச்சமின்றி எங்கு வேண்டுமானாலும் செல்லும் விதமாக பாதுகாப்பான மாநிலம் உருவாக்கப்படும் எனக் கூறினார்.

மேலும், மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி, 24 மணிநேர குடிநீர் வசதி ஏற்படுத்தித் தரப்படும் எனக் கூறி, அரசியல் மாற்றம் தேவைக்கான காரணங்களை விளக்கிக் கூறினார். தற்போது, கோவை மாநகரில் அனைத்து நீர்நிலைகளும் வறண்டு காணப்படுகிறது, இந்த நிலை தொடர்ந்தால் கோவை மக்கள் வறட்சியை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என கோவை சரளா தெரிவித்தார்.

"தமிழகத்தில் பெண்கள் ஒடுக்கப்படுகின்றனர். இந்த நிலை கட்டாயம் மாற்றப்பட வேண்டும். எனவே, ஒவ்வொரு வீடுகளில் இருக்கும் ஆண்களும் மக்கள் நீதி மய்யத்திற்கு வாக்களித்தால், அவர்கள் பெண்களின் மேம்பாட்டிற்காக நடவடிக்கை மேற்கொள்வார்கள். மக்கள் நீதி மய்யம் மக்களுக்கான பணிகளை செய்ய தயாராக இருக்கிறது. எனவே, பொதுமக்கள் தங்களின் வாக்குகளை விற்பனை செய்ய வேண்டாம். வாக்குகளை விற்பது ஒருவிதமான ஊழலாகும். உங்களது வாக்குகள் உண்மையான கட்சிக்கும், சரியான வேட்பாளர்களுக்கு அளியுங்கள், வரும் ஏப்.,18-ம் தேதி நமது மாநிலத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் நாளாகும்," என்றார் கோவை சரளா.