கோவை : பாப்பநாயக்கன் பாளையம் அருகே அதிவேகமாக போட்டி போட்டுக் கொண்டு வந்த தனியார் பேருந்துகள் இரண்டும் ஒன்றுடன் ஒன்று உரசிக் கொண்ட நிலையில், அதிர்ஷ்டவசமாக பொதுமக்கள் காயமின்றி தப்பினர்.
கோவை : பாப்பநாயக்கன் பாளையம் அருகே அதிவேகமாக போட்டி போட்டுக் கொண்டு வந்த தனியார் பேருந்துகள் இரண்டும் ஒன்றுடன் ஒன்று உரசிக் கொண்ட நிலையில், அதிர்ஷ்டவசமாக பொதுமக்கள் காயமின்றி தப்பினர்.
கோவை மாவட்டத்தில் தொடர்ச்சியாகவே தனியார் பேருந்துகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக, தனியார் பேருந்துகள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள நேரத்தை காட்டி, போட்டி போட்டுக்கொண்டு பேருந்தை இயக்கி வருகின்றனர். இதில், இவர்களுக்குள் நடக்கும் அதிவேக போட்டியில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பலியாகியுள்ளனர். இது தொடர்பாக உரிய நடவடிக்கைகளை வட்டாரப் போக்குவரத்துத் துறையும், போக்குவரத்து காவலர்களும் மேற்கொள்ளாததால், தொடர்ச்சியாக இவர்களின் விதிமீறல்கள் அதிகரித்துக்கொண்டே போகிறது.

இந்த நிலையில், நேற்று மாலை சுமார் 7.45 மணியளவில் TN 37 CA 6442 என்ற எண் கொண்ட நித்திஷ் என்ற நிறுவனத்திற்கு சொந்தமான 5-ம் எண் கொண்ட பேருந்தும், TN66 F 2299 என்ற எண் கொண்ட கே.ஏ.ஜி என்ற நிறுவனத்திற்கு சொந்தமான தனியார் பேருந்தும் மணி ஸ்கூல் அருகே போட்டி போட்டுக் கொண்டு சென்று கொண்டிருந்தனர். அப்போது, இரண்டு பேருந்துகளும் ஒன்றுடன் ஒன்று உரசிக் கொண்டது. இதில், சாலையில் சென்று கொண்டிருந்தவர்களும், பேருந்து பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக பந்தயசாலை காவல்நிலைய போலீசார் இரண்டு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களை அழைத்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர், இரண்டு தனியார் பேருந்து நிர்வாகத்தினரும் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, வழக்கை திரும்பப் பெற்றுக் கொண்டனர்.
ஆனால், இதுபோன்று நடக்கும் போட்டியால் உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. ஆகவே, காவல்துறையினர் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தொடர்ச்சியாக அதிவேகமாக வாகனத்தை ஓட்டி பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் மற்றும் நிர்வாகத்தின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.