கோவை : கேரள எல்லையில் மாவோயிஸ்ட்டுக்கள் நடமாட்டமுள்ள பகுதி வாக்குச்சாவடிகளில் கூடுதல் மத்தியப்படை பாதுகாப்பு வழங்கப்படும் என மேட்டுப்பாளையத்தில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
கோவை : கேரள எல்லையில் மாவோயிஸ்ட்டுக்கள் நடமாட்டமுள்ள பகுதி வாக்குச்சாவடிகளில் கூடுதல் மத்தியப்படை பாதுகாப்பு வழங்கப்படும் என மேட்டுப்பாளையத்தில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இன்று மண்டல அளவிலான தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு தேர்தல் நடைமுறைகள் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடு குறித்த இறுதிகட்ட பயிற்சி வழங்கப்பட்டது. இதில், நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் மேட்டுப்பாளையம், அவினாசி, மற்றும் பவானிசாகர் ஆகிய மூன்று தொகுதிகளை சேர்ந்த மண்டல அளவிலான தேர்தல் நடத்தும் 800 அரசு அலுவலர்கள் மூத்த அதிகாரிகள் மூலம் இறுதிகட்ட பயிற்சியும் வாக்குப்பதிவு குறித்து அவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமும் அளிக்கப்பட்டது.

வாக்குப்பதிவு இயந்திரத்தைக் கையாளும் முறை இத்தேர்தலில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் இயந்திரத்தின் செயல்பாடு, வாக்காளர்களிடம் நடந்து கொள்ளும் முறை குறித்து இப்பயிற்சி முகாமில் பங்கேற்ற நீலகிரி மக்களவை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான இன்னசென்ட் திவ்யா விளக்கிக் கூறினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது :- யானை உள்ளிட்ட காட்டுயிர்கள் நடமாட்டமுள்ள வனம் சார்ந்த மலைக்கிராமப்புறங்களில் பணிக்கு சென்று திரும்பும் தேர்தல் தேர்தல் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு வனத்துறை மூலம் தகுந்த பாதுகாப்பு கொடுக்கப்படும். தமிழக எல்லைக்குள் மாவோயிஸ்ட்டுக்கள் நடமாட்டம் இதுவரை கண்டறியப்படவில்லை. ஆனால். நீலகிரி மக்களவை தொகுதியை ஒட்டியுள்ள கேரள பகுதிகளான வயநாடு, மலப்புரம் போன்ற இடங்களில் மாவோயிஸ்ட்டுக்கள் நடமாட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இரு மாநில எல்லையோரம் உள்ள வாக்குச் சாவடிகளில் சி.ஆர்.பி.எப். எனப்படும் மத்திய போலீஸ் பாதுகாப்பு மற்றும் நக்சல் தடுப்பு அதிரடிப்படை பாதுகாப்பு உள்ளிட்டவை கூடுதலாக வழங்கப்படும், என்றார்.