கோவை : சூலூர், அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலுக்கான தி.மு.க. வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளனர்.
கோவை : சூலூர், அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலுக்கான தி.மு.க. வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளனர்.

வரும் 18-ம் தேதி தமிழகத்தில் நடக்கும் நாடாளுமன்ற தேர்தலுடன் காலியாகவுள்ள 22 சட்டமன்ற தொகுதிகளில் 18-க்கு மட்டுமே இடைத்தேர்தல் நடக்கிறது. வழக்கு நிலுவையில் இருந்த காரணத்தால், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை. சூலூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கனகராஜ் அண்மையில் மாரடைப்பால் மரணமடைந்ததால் அந்த தொகுதியும் காலியானது.
இந்த நிலையில், கடைசி கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடக்கும் மே 19-ம் தேதி, காலியாக உள்ள இந்த 4 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது. இதற்காக, வேட்பு மனு தாக்கல் வரும் 29-ம் தேதி தொடங்குகிறது. 30-ம் தேதி மனுக்கள் பரிசீலனை நடக்கிறது. வாபஸ் பெற கடைசி நாள் மே 2-ம் தேதி என்று அறிவிக்கப்பட்டது.
ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள அ.தி.மு.க. குறைந்தபட்சம் 6 தொகுதிகளுக்கு மேல் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஒருவேளை 20-க்கும் மேற்பட்ட இடங்களில் தி.மு.க. வெல்லும் பட்சத்தில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இந்த நிலையில், 4 தொகுதிகளுக்கான தி.மு.க. வேட்பாளர்கள் பெயர் பட்டியலை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ளார். அதன்படி, சூலூர் தொகுதியில் பொங்கலூர் பழனிசாமி தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல்
சூலூர் : பொங்கலூர் பழனிசாமி
அரவக்குறிச்சியில் : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி
திருப்பரங்குன்றம் : டாக்டர் சரவணன்
ஒட்டப்பிடாரம் : எம்.சி. சண்முகையா
கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற செந்தில் பாலாஜி, தினகரன் அணியில் சேர்ந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.