கோவை : கோவை மாவட்டத்தில் மக்களவை தேர்தலின் போது வாக்குச்சாவடிகளுக்கு வரும் மாற்றுத்திறனாளிகளை அழைத்து செல்ல மற்றும் அவர்களுக்கு உதவ தன்னார்வலர்களை நியமிக்க தேர்தல் பிரிவு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
கோவை : கோவை மாவட்டத்தில் மக்களவை தேர்தலின் போது வாக்குச்சாவடிகளுக்கு வரும் மாற்றுத்திறனாளிகளை அழைத்து செல்ல மற்றும் அவர்களுக்கு உதவ தன்னார்வலர்களை நியமிக்க தேர்தல் பிரிவு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 18 தேதி நடைபெறுகிறது. கோவை மாவட்டத்தில் உள்ள பத்து சட்டமன்ற தொகுதிகளில் 975 மையங்களில் 3070 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. தேர்தலில் 100 சதவிதம் வாக்குப்பதிவு பதிவாக வேண்டும் என வாக்களிக்க தகுதியான அனைத்து தரப்பினரையும் வாக்களிக்க வைக்க வேண்டும் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் மிக தீவிர பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் உள்ள 12 ஆயிரத்து 686 மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்களிக்க எதுவாக 975 மையங்களுக்கு வீல்சேர்கள் அனுப்பப்பட்டுள்ளன. தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் தன்னார்வலர்களை நியமிக்க தேர்தல் பிரிவு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இது குறித்து தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் தன்னார்வலர்களை நியமிக்க முடிவு செய்துள்ளோம். இவர்களுக்கு அன்றைய தினம் ரூ 250 சம்பளமாக வழங்கப்படும். இதற்கான ஒப்புதல் கிடைத்ததும் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்,’’ என்றார்.