கோவை : கோவை நாடாளுமன்ற தேர்தலையொட்டி காவல்துறையினர், முன்னாள் ராணுவ வீரர்கள், ஊர்க்காவல் படையினர் என 5 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் தெரிவித்துள்ளார்
கோவை : கோவை நாடாளுமன்ற தேர்தலையொட்டி காவல்துறையினர், முன்னாள் ராணுவ வீரர்கள், ஊர்க்காவல் படையினர் என 5 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் தெரிவித்துள்ளார்
தமிழகத்தில் வரும் 18-ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறுவதையொட்டி, பாதுகாப்பு பணியில் காவல்துறையினர், ஓய்வு பெற்ற காவல்துறையினர், ஊர்க்காவல் படையினர் போன்றோர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அதேபோல, அனைத்துப் பகுதிகளிலும் சி.ஆர்.பி.எஃப். போலீசார் தொடர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அதேபோல, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பக எல்லைக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரப்படுத்தப்பட்டுள்ளனர்.
இது குறித்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் கூறியதாவது :- கோவை மாவட்டத்தில் தேர்தல் பணிக்காக மாவட்ட காவல்துறையினர், மத்திய ரிசர்வ் போலீசார் என 2,000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அதேபோல, முன்னாள் படைவீரர்கள், ஊர்க்காவல் படையினர், தன்னார்வல ஊழியர்கள் என 3,000க்கும் மேற்பட்டோர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பதட்டமான வாக்குச்சாவடிகளான தமிழக - கேரள எல்லையை ஒட்டியுள்ள ஆனைக்கட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மத்திய ரிசர்வ் போலீசார் மற்றும் மாவட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். இதுபோன்ற பதட்டமான பகுதிகளில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதில், மாவோயிஸ்ட் நடமாட்டம் உள்ள வரையறுக்கப்பட்ட பகுதிகளில் நக்சல் தடுப்பு பிரிவு போலீசாரும் தேர்தலையொட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். அதேபோல, பொதுமக்கள் தேர்தலில் பாதுகாப்பாக வாக்களிக்க கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிய பாதுகாப்பு அளிக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. இதனால், பொதுமக்கள் தைரியமாக வாக்களிக்க வேண்டும். 100% வாக்களித்து ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும், எனக் கூறினார்.