கோவை : கோவை அருகே தேர்தலுக்காக விநியோகம் செய்வதற்காக பணம் ஏற்றி வந்ததாக வெளியான வதந்தியால் கண்டெய்னர் லாரியை பொதுமக்கள் சிறைபிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவை : கோவை அருகே தேர்தலுக்காக விநியோகம் செய்வதற்காக பணம் ஏற்றி வந்ததாக வெளியான வதந்தியால் கண்டெய்னர் லாரியை பொதுமக்கள் சிறைபிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

உக்கடம் ஆத்துப்பாலம் பகுதியில் நேற்றிரவு வேகமாகச் சென்ற கண்டெய்னர் லாரி ஒன்றை அப்பகுதி மக்கள் விரட்டி பிடித்தனர். லாரி ஓட்டுநர் பிரகாஷ் முன்னுக்குப்பின் முரணாக பேசிய நிலையில், கண்டெய்னர் லாரியில் கட்டுகட்டாக பணம் இருப்பதாக தகவல் பரவியதால் பொதுமக்கள் அங்கு குவிந்தனர். தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளும், காவல்துறையினரும் வந்து விசாரணையில் ஈடுபட்டனர். இதில், கண்டெய்னர் லாரி தாராபுரத்தை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. லாரியில் டீத்தூள் இருப்பதாக ஓட்டுனர் கூறியும் நம்ப மறுத்த பொதுமக்கள், அதனை அங்கேயே திறந்து காட்டுமாறு வலியுறுத்தினர். போலீசார் கேட்டுக் கொண்டும் கூட்டம் கலைந்து செல்லாததால் லேசான தடியடி நடத்தி விரட்டியடித்தனர். பின்னர் அங்கு வந்த கோவை மாநகர காவல் துணை ஆணையர், பொதுமக்கள் கலைந்து செல்லுமாறும் தேர்தல் பறக்கும் படையினரின் சோதனைக்கு இடையூறு செய்ய வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார்.

கண்டெய்னரின் பூட்டை உடைக்க முயன்றும் முடியாததால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்று திறந்து பார்த்தபோது, அதில் மூட்டைகளில் பேக்செய்யப்பட்ட டீத்தூள் இருந்தது. வெள்ளக்கிணறு பகுதியில் இருந்து ஏற்றுமதிக்காக அந்த லாரி கொச்சிக்கு அனுப்பப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது. கண்டெய்னர் லாரியில் பணம் இருப்பதாக வதந்தி பரவியதால் கோவையில் 5 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.