திருப்பூர் : திருப்பூர் தொழில்துறையை பாதிப்புக்குள்ளாக்கிய அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியினர் வாக்கு கேட்டு வரவேண்டாம் எனவும், அதேபோல, ஐயப்பன் பக்தர்கள் இருப்பதால் தி.மு.க. - கம்யூனிஸ்ட்டுகள் வாக்கு கேட்டு வரவேண்டாம் என வீடுகளில் ஓட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் : திருப்பூர் தொழில்துறையை பாதிப்புக்குள்ளாக்கிய அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியினர் வாக்கு கேட்டு வரவேண்டாம் எனவும், அதேபோல, ஐயப்பன் பக்தர்கள் இருப்பதால் தி.மு.க. - கம்யூனிஸ்ட்டுகள் வாக்கு கேட்டு வரவேண்டாம் என வீடுகளில் ஓட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தனும், தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயனும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் ஐயப்பன் கோவில் விவகாரத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் பெண்களை கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தியதால், கோவிலின் புனிதம் கெட்டுவிட்டதாக பா.ஜ.க.வினர் பரப்புரை செய்து வந்த நிலையில், திருப்பூரில் பல்வேறு பகுதிகளில் இங்கு ஐயப்பன் பக்தர்கள் இருப்பதால் தி.மு.க. - கம்யூனிஸ்ட் கட்சிகள் ஓட்டு கேட்டு வரவேண்டாம் என போஸ்டர்களை ஒட்டினர்.

இதற்கு பதிலடியாக, பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளால் தொழில்துறை பாதிக்கப்பட்டுள்ளதாலும், அதேபோல், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதில் பாரபட்சம் காட்டியதாலும், பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியானதால் பெண் குழந்தைகள் இருப்பதாலும், தொழில்துறை நலிவடைந்ததாலும் அ.தி.மு.க., பா.ஜ.க.வினர் ஓட்டு கேட்டு வரவேண்டாம் எனவும் வீடுகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. திருப்பூர் மாநகரப்பகுதிகளில் இரு தரப்பினரும் மாறி மாறி போஸ்டர்களை ஒட்டியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது