கோவை : காற்றில் ஊழல் செய்த கட்சியான திமுகவில் உள்ள தொண்டர்களும் அப்படியே இருப்பார்கள் என கோவையில் பிரச்சாரம் செய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார்.
கோவை : காற்றில் ஊழல் செய்த கட்சியான திமுகவில் உள்ள தொண்டர்களும் அப்படியே இருப்பார்கள் என கோவையில் பிரச்சாரம் செய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் மகேந்திரன் மற்றும் கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோரை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொண்டார். கோவை சுந்தராபுரத்தில் மகேந்திரனுக்கு வாக்கு சேகரித்த போது அவர் பேசியதாவது:- வலிமையான பிரதமர் அமைந்தால் தான் நாடு பாதுகாப்பாக இருக்கும். திறமையான பிரதமரை தேர்வு செய்ய மக்கள் செல்வாக்கு உள்ள கட்சிகள் இணைந்து தேர்தலில் போட்டியிடுகிறது. ஸ்டாலின் சட்டமன்ற தேர்தல் நடப்பதாக எண்ணிக்கொண்டு, பொய்யான வாக்குறுதிகளை கொண்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். தமிழக வாக்களர்கள் திறமையானவர்கள். யாருக்கு வாக்களிக்க வேண்டும் என தெரிந்தவர்கள். தமிழ்நாட்டிலேயே முதல் கான்கிரீட் சாலை பொள்ளாச்சி -கோவை இடையே அமைக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களுக்கு ஹஜ் மானியம், முத்தலாக் எதிர்ப்பு போன்றவற்றில் அ.தி.மு.க. தான் பாதுகாப்பாக இருந்தது, எனக் கூறினார்.

பின்னர், கோவை ராஜவீதி தேர்நிலை திடலில் இராதாகிருஷ்ணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட அவர், தி.மு.க. கம்பெனியாக மாறிவிட்டது. அங்கு குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பதவிக்கு வர முடியும். வைகோ ஏன் சொந்த சின்னத்தில் நிற்கவில்லை. நினைத்தப்படி வைகோ பேசுகிறார். காற்றில் ஊழல் செய்த கட்சி தி.மு.க., அங்கு தொண்டர்களும் அப்படியே இருப்பார்கள். கையும் களவுமாக வேலூரில் பணம் பிடிபட்ட போதும், அதை வருமான வரித்துறை கொண்டு வந்து வைத்ததாக ஸ்டாலின் பொய் சொல்கிறார். அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால், கோவை மாநகரம் அனைத்து வசதிகள் கொண்ட மாநகரமாக மாறும். விமான நிலைய விரிவாக்கம், உக்கடம் மேம்பாலம் உள்ளிட்ட பணிகள் மத்திய அரசின் ஆதரவுடன் நடைபெற்று வருகிறது, என முதலமைச்சர் தெரிவித்தார்.
கோவையில் முதலமைச்சர் சுந்தராபுரம், குனியமுத்தூர், ராஜவீதி, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார். இந்த கூட்டங்களில் பா.ஜ.க., அ.தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.