கோவை : புகார் கொடுத்த போதே காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து இருந்து இருந்தால், மகள் பிணமாக கண்டெடுத்து இருக்க மாட்டார்கள் என உயிரிழந்த கல்லூரி மாணவியின் உறவினர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.
கோவை : புகார் கொடுத்த போதே காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து இருந்து இருந்தால், மகள் பிணமாக கண்டெடுத்து இருக்க மாட்டார்கள் என உயிரிழந்த கல்லூரி மாணவியின் உறவினர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.

ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க இளம் கல்லூரி மாணவி கோவை ராமகிருஷ்ணா கல்லூரியில் பயின்று வருகிறார். நேற்று முதல் காணவில்லை என அவரது பெற்றோர், கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதனிடையே, பொள்ளாச்சி - தாராபுரம் சாலையில் இளம்பெண் ஒருவர் அரை நிர்வாணத்துடன் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போலீசார் நடத்திய விசாரணையில், காணாமல் போன கல்லூரி மாணவிதான் கொலை செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. அதேபோல, மாணவியை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டு இருப்பார் என்ற கோணத்தில் போலீசார் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, பொள்ளாச்சி அருகே இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் உத்தரவின்பேரில், 4 தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். அதேபோல, மாணவி கல்லூரியில் இருந்து காரில் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் அந்தப் பகுதியில் இருக்கும் சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், புகார் கொடுத்த போதே காவல்துறையினர் உடனடியாக செல்போன் எண்ணை வைத்து தேடி இருந்தால், காணாமல் போன தனது மகளை இன்று பிணமாக கண்டெடுத்து இருக்க மாட்டார்கள் என உறவினர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.