கோவை : பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட 7 வயது சிறுமியின் உடற்கூறாய்வு அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி தெரிவித்தார்.
கோவை : பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட 7 வயது சிறுமியின் உடற்கூறாய்வு அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி தெரிவித்தார்.
100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடத்தில் ராட்சத பலூனை பறக்க விட்டும், அஞ்சல் தலையை வெளியிட்டும் துணி பைகளை வழங்கும் நிகழ்ச்சியை கோவை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான கு. ராசாமணி இன்று தொடங்கி வைத்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது அவர் கூறியதாவது :- நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஏற்பாடுகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசு பணியாளர்களுக்கு அஞ்சல் வாக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. அனைவரும் வாக்களிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
வரும் தேர்தலில் புதிய வாக்காளர் பங்கேற்று வாக்களிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 68 % வாக்குகள் பதிவானது. இந்த முறை 100 % வாக்குகள் பதிவை வலியுறுத்தி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தேர்தலை முன்னிட்டு 90 பறக்கும் படையினர், 150 அணிகளாக பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதுவரை 8 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு உரிய ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டவர்களுக்கு இரண்டரை கோடி ரூபாய் திருப்பி கொடுக்கப்பட்டது. கோவை மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் பணிகளில் 15 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தல் நல்ல முறையில் நடைபெற அனைத்து முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம். சிங்கிள் விண்டோஸ் சிஸ்டம் மூலம் அரசியல் கட்சிகளுக்குப் பாரபட்சமின்றி அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. தேர்தல் அதிகாரி மற்றும் மாவட்ட ஆட்சியர் என்ற முறையில் தான் இதனை முழுமையாகக் கண்காணித்து வருகிறேன். தேர்தல் விதிமுறைகளை மீறியதாக அரசியல் கட்சியினர் மீது 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, என தெரிவித்தார்.
மேலும், பன்னிமடை 7 வயது சிறுமி கொலை வழக்கில் உடற்கூராய்வு அறிக்கை இதுவரை வழங்கப்படாதது குறித்த கேள்விக்கு, "இது தயாராகி விட்டது, விரைவில் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்படும். பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு விரைவில் நிவாரண நிதி வழங்கப்படும்," என்றார் மாவட்ட ஆட்சியர்.